தவெக ஆதவ் அர்ஜுனா உயிருக்கு ஆபத்து! ஜூலை 10 ஆம் தேதி ஆழ்வார்பேட்டையில் நடந்த பகீர் சம்பவம்!
சென்னை: எனது உயிருக்கு ஆபத்து என தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளராக இருக்கும் ஆதவ் அர்ஜுனா புகார் அளித்துள்ளார். தனது அலுவலகத்தில் இருந்து தன்னை யாரோ ஆயுதங்களுடன் நோட்டமிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளராக இருப்பவர் ஆதவ் அர்ஜுனா. இவரது அலுவலகம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ளது. இவர் சென்னை திநகர் துணை ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரில் ஆதவ் கூறியிருப்பதாவது: சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் இருக்கும் எனது அலுவலகம் அருகே கடந்த ஜூலை 10 ஆம் தேதி ஆயுதங்கள் கொண்ட சில மர்மநபர்கள் வந்தனர். அவர்களது அசாதாரண மற்றும் சந்தேகமான நடமாட்டம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனது அலுவலகத்திற்கு ஆட்டோவில் வந்த அவர்கள் கையில் ஆயுதங்களை வைத்திருந்தனர். அவர்கள் எதற்காக வந்திருந்தனர் என்பதை புரிந்து கொண்டு அவர்களை எச்சரித்தேன். பின்னர் எனது அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர்.
அதே நாளில் ஒரு கட்சியின் கொடி கட்டப்பட்டிருந்த காரிலும் மர்மநபர்கள் வந்து என்னை நோட்டமிட்டனர். எனவே எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என ஆதவ் அர்ஜுனா தனது புகாரில் பதிவு செய்துள்ளார். மேலும் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அந்த மர்ம நபர்கள் யார் என்பதை கண்டறிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆதவ் அர்ஜுனா உயிருக்கு ஆபத்து என தகவல் வெளியானதை அடுத்து தவெக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தனது வழக்கறிஞர் மூலம் ஆதவ் அனுப்பிய புகாரை திநகர் துணை ஆணையர் பெற்றுக் கொண்டார். சம்பந்தப்பட்ட பகுதிகளில் சிசிடிவி காட்சிகள், ஆட்டோ விவரங்களை சேகரித்து விசாரணை நடத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளாராம்.












Click it and Unblock the Notifications