தமிழக சட்டசபை தேர்தல்.. ஐடி ஊழியர்களுக்கு பிரதான கட்சிகளின் வாக்குறுகளும்.. சில கோரிக்கைகளும்!
சென்னை: சென்னை கோயம்புத்தூர் மதுரை போன்ற தமிழ்நாட்டின் ஐடி தலைநகரங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகள் ஐடி ஊழியர்களுக்கு என்னென்ன வாக்குறுதிகளைக் கொடுத்து இருக்கின்றார்கள் ? அவர்கள் கோரிக்கைகள் தான் என்ன? என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
ஐடி காரங்களுக்கு என்னப்பா கஷ்டம், அப்படி என்ன தனியாக கோரிக்கைகள் இருந்துவிடப் போகிறது என்று சாதாரணமாகக் கடந்து விடாதீர்கள். அறிந்தவரையில், அடிப்படைத் தொழிலாளர் உரிமைகள் அதிகம் மறுக்கப்படும் இடங்களில் ஒன்றாக இந்த ஐடி இருக்கின்றது. ஊழியர்களின் தேவை அதிகமாக இருந்த காலகட்டத்தில் அவர்களின் நிலை வேறு. இன்று நிலைமை தலைகீழ். தொலைநோக்குப் பார்வையோடு இதைக் கையாளாவிட்டால் மாநிலத்தில் குறிப்பிட்ட வரி வருவாய் சதவிகிதத்தை அளித்துக் கொண்டிருக்கின்ற இந்தத் துறை நாளடைவில் பலவீனமாகி விடும்.
சில பொதுவான கோரிக்கைகள் சட்டமன்ற தேர்தலையொட்டி :
1. OMR சாலையில் டோல் கட்டணம்
2. அங்கீகரிக்கப்பட்ட தொழிற் சங்கத்தின் வாயிலாக அடிப்படைத் தொழிலாளர் உரிமைகளை மீட்டுக் கொடுத்தல்
3. மாநகரத்தில் இரவு ஷிப்டில் வேலை செய்யும் நபர்களுக்கான குறிப்பாக பெண்களுக்கான பாதுகாப்பை நிறுவனத்தின் வாயிலாகவும் அரசும் உறுதிப்படுத்துதல்.
4. அதிக அளவில் மன அழுத்தத்தை தருகின்ற துறையாக இருப்பதினால் நிறுவனங்களில் மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு வருகின்ற புகார்கள் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகள் அரசின் கண்காணிப்பின் கீழ் வர ஆவன செய்ய வேண்டும்.
இவை பொதுவான கோரிக்கைகளே. புரிதலுக்காக இன்னும் ஒரு சில கூடுதல் கோரிக்கைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
முதலாவதாக கேன்டீனில் நிர்ணயிக்கப்படும் அதிகபட்ச விலை : ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரியும் ஒரு சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள நிறுவனத்தில் கேன்டீனில் விலை ஹோட்டல் விலையைப் போன்று அல்லாமல் குறைவாக இருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லாமல் அந்த குறிப்பிட்ட ஒப்பந்தத்தைக் கையாளுகின்ற ஊழியர் குறிப்பிட்ட ஒரு தொகையை கமிஷனாக பெற்றுக்கொண்டு அநியாய விலைக்கு உணவை விற்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். ஒரு நாளைக்கு 8லிருந்து 12 மணி நேரம் பணிபுரியக்கூடிய ஆரம்ப நிலை ஊழியர்களின் சம்பளத்தில் பெரும்பகுதி உணவுக்கே செலவாகிறது. இதர நகரத்திற்கே உரிய செலவுகளையும் கணக்கிட்டு பார்க்கும் பொழுது ஐடி துறையில் சம்பாதித்தாலும் மிச்சம் பிடிக்க முடியாது என்கின்ற மனநிலையில் கொண்டு வந்து விடுவதால் வேலைவாய்ப்பு இருந்தும் இந்தத் துறையை நாடுவோர் எண்ணிக்கை குறைகின்றது. அரசிடமிருந்து SEZ சலுகைகளைப் பெறும் இந்த நிறுவனங்கள் அவற்றை ஊழியர்களுக்கும் முறையாகப் பகிர்ந்தளிப்பதை உறுதி செய்தல் அவசியம்.
பேரிடர் காலத்திலும் ஊழியர்களை பணிக்கு அழைப்பது : சமீபத்திய சென்னை புயல்களை நாம் நன்கு அறிவோம். இந்த பேரிடர் காலத்தில் அரசின் எச்சரிக்கைகளையும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளையும் காற்றில் பறக்க விட்டு விட்டு ஊழியர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றார்கள்.
கொரோனா பேரிடர் காலத்திலும் கொரோனா அதிகம் பரவி இருக்கின்ற நகரங்களுக்கு பயணம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட ஊழியர்கள் ஏராளம் (இங்கே இருக்கின்ற அந்த நிறுவனத்தின் கிளையிலிருந்தும் அதே பணியை தொய்வில்லாமல் செய்து கொடுக்க முடியும் என்கின்ற நிலை இருந்தும்). நிறுவனத்தின் சர்வாதிகாரப் போக்கு ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரை கடுமையான மன உளைச்சலுக்கு தள்ளுகிறது. அரசே எச்சரித்த பின்பும் இந்த சர்வாதிகார போக்கை மாற்றிக் கொள்ளாத நிறுவனங்களை என்ன செய்வது?
எல்லா அரசியல் கட்சிகளும் கூறுகின்ற புது வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்ற வாக்குறுதி வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அதேசமயம் பல லட்சம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளித்துக் கொண்டிருக்கின்ற மற்றும் மாநில அரசுக்கு நல்ல வரி வருவாயை கொடுத்துக் கொண்டிருக்கின்ற ஐடி துறையை பொலிவிழக்கச் செய்யாமலிருப்பதும் முக்கியம் பெறுகிறது.
திறன் மேம்பாடு , புதிய ஒப்பந்தங்களைக் கொண்டுவருதல் ஆகியவற்றோடு இதுபோன்ற கண்ணுக்கு தெரிந்தும் தெரியாமலும் இருக்கின்ற சிறு சிறு குறைகளைக் களைந்தால் மட்டுமே இளைஞர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பைக் கொடுத்துக் கொண்டிருக்க முடியும்.
சென்னை, மதுரை, கோயம்புத்தூர் பெருநகர சட்டமன்ற அனைத்து கட்சி வேட்பாளர்களும் இந்த கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும்.
கட்டுரை : ஒன்இந்தியா தமிழ் வாசகர் கெளசல்யா