உஷார் நிலையில் மின் வாரியம்... ஊழியர்களை தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்
சென்னை: தமிழகம் முழுவதும் பரவலாக மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் மின்வாரிய ஊழியர்கள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, திருச்சி கோட்டங்களில் மின் விநியோகத்தை 24 மணி நேரமும் கண்காணிக்குமாறு பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் மின்வாரிய ஊழியர்கள் முன்பைக்காட்டிலும் இப்போது கூடுதல் கவனத்துடன் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
இயல்பு வாழ்க்கை
கடந்த 25-ம் தேதி பரவலாக தொடங்கிய மழை கடந்த 2 நாட்களாக சென்னை, நாகை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மழை வெளுத்து வாங்குவதால் சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கத் தொடங்கியுள்ளது.
தொடர் கண்காணிப்பு
இந்நிலையில், மழை மேலும் வலுவடையும் என்பதால் வருவாய்த்துறை, மின்சாரத்துறை, உள்ளாட்சித்துறை ஆகிய மூன்று துறைகளும் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கி வருகின்றன. அதிகாரிகளும், ஊழியர்களும் மழைவெள்ள பாதிப்புகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
மின் விநியோகத்தையும், துணை மின் நிலையங்களையும் பொறியாளர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிக்க வேண்டும் என்றும், அவசர காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மறு அறிவிப்பு
இந்த நடைமுறை மறு அறிவிப்பு வரும் வரை செயல்பாட்டில் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மின் வாரியம் உத்தரவால் பொறியாளர்களும், மின்வாரிய ஊழியர்களும் மின் விநியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்தத்தொடங்கியுள்ளனர்.