ரூ.20 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை.. பொங்கல் போனஸ் எப்படி கொடுப்பது? திணறும் தமிழக அரசு
சென்னை: ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாயை தமிழக அரசு அறிவித்துள்ளதால், தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.20,000 கோடியை எட்டுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் போனசாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. அதனை தொடர்ந்து, 2 கோடி மக்கள் பயனடைவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
பொங்கல் போனஸ் அறிவிப்பு எதிரொலியாக, தமிழக அரசுக்கு கூடுதலாக 2ஆயிரத்து 20 கோடி செலவினம் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த தொகையை எதை கொண்டு ஈடுகட்டுவது என்று தெரியாமல் தமிழக அரசு தடுமாறி வருகிறது.
ஏற்கனவே, நிதி நிலை அறிக்கையின்படி தமிழக அரசானது 17,0490 கோடி வருவாய் பற்றாக்குறையில் தடுமாறி வரும் நிலையில், பொங்கல் போனசுக்கான 2 ஆயிரம் கோடியை எவ்வாறு ஈடுகட்டும் என்று தெரியாமல் திணறுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, 20 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை நிலவி வருகிறது. 2016-17ம் ஆண்டில் இது 12,964 கோடியாகவும், அதன் பின்னர் 2017-18ம் ஆண்டில் 18,370 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் போதிய தயாரிப்பின்றி பொங்கல் போனஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான செலவு தொகையை எதில் இருந்து ஈடுகட்டுவது என்று தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.