வெளிநாட்டுகளில் சிக்கும் தமிழர்கள்.. தடுக்க தமிழக அரசு எடுக்கும் முடிவு - விரைவில் கட்டாயமாகும் விதி
சென்னை: வெளிநாடுகளில் தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலாளர்கள், பல்வேறு காரணங்களுக்கு அங்கு சிக்கித் தவிப்பதும் பின்னர் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு மீட்கப்படுவது தொடர் கதையாகி இருக்கும் நிலையில் இதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு புதிய விதியை அமல்படுத்த திட்டமிட்டு இருக்கிறது.
வெளிநாடுகளில் தொழில் நிமித்தமாக பல லட்சக்கணக்கான தமிழர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் சில போலி ஏஜெண்டுகள், மோசடியான டிராவல்ஸ் நிறுவனங்கள் மூலம் ஏமாற்றப்பட்டு வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கின்றன.
நல்ல வேலை என்று அழைத்துச் செல்லப்பட்டு அடிமையாக வேலை செய்ய வைப்பது, பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்த கட்டாயப்படுத்துவது போன்றவை தொடர் கதையாகி வருகின்றன.

சிக்கும் தமிழர்கள்
இவ்வாறு சிக்கிக்கொள்ளும் தமிழர்கள் தங்களை மீட்கக்கோரி வீடியோக்கள் வெளியிடுவதும் அதன் பின்னர் தமிழ்நாடு அரசு தலையிட்டு அவர்களை தூதரக உதவியுடன் மீட்டு அழைத்து வருவதும் வாடிக்கையாகிவிட்டது. இதனை கட்டுப்படுத்த வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழர்கள் அரசிடம் நிச்சயம் பதிவு செய்ய வேண்டும் என விழிப்புணர்வு செய்யப்பட்டாலும் பலர் அதை பின்பற்றுவது கிடையாது.

நல வாரியம்
எனவே இதுபோன்ற சம்பவங்களை தடுக்கவும், பிரச்சனைகளில் சிக்கினால் மீட்கவும் புலம்பெயர் தமிழர் நல வாரியத்தில் தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும் என்பதை கட்டாயப்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் தகவல்கள் முழுமையாக அரசிடம் இருக்கும் என்றும், விரைவில் நடைமுறைக்கு வர இருக்கும் இந்த புலம் பெயர் தமிழர் நலவாரியம் அமைக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

பதிவு செய்வது எப்படி?
சென்னையில் இயங்கி வரும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் Protector of Emigrants அலுவலகத்தில் ஆவணங்களை சமர்பித்து பதிவு செய்ய வேண்டும். இந்த அலுவலகம் மூலம் வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் நிறுவனங்களின் பட்டியலை அறியலாம். மத்திய அரசு அங்கீகரித்த நிறுவனத்தில் சென்றால் மட்டுமே அவர்களை மீட்க அரசு முழு பொறுப்பேற்கும்.

பதிவு செய்த நிறுவனம்
பதிவு செய்த நிறுவனங்கள் மத்திய அரசிடம் ரூ.50 லட்சம் வரை டெபாசிட் செய்துள்ளது. இவர்கள் மூலம் வெளிநாடு செல்லும் பயணிகள் பிரச்சனையில் சிக்கினால் இந்த தொகையின் மூலமாக அவர்களை மீட்க அரசு முயற்சிக்கும். சுற்றுலா விசா மூலம் வெளிநாடு சென்று பணிபுரியக்கூடாது என்றும், சமூக வலைதளங்கள், செய்தித்தாள் விளம்பரங்களை முழுமையாக நம்பி வெளிநாடு செல்வதை தவிர்க்கவும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications