அமித்ஷா குழுவின் இந்தி நெருப்பு..தமிழகத்தில் மீண்டும் வெடித்த வடக்கை வெலவெலக்க வைக்கும் முழக்கங்கள்!
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக் குழுவின் இந்தி திணிப்பு பரிந்துரைகளால் தமிழகம் மீண்டும் கொந்தளித்து கொண்டிருக்கிறது. இந்தி திணிப்பு முயற்சிகளானது இந்தியாவின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் என தமிழக தலைவர்கள் பகிரங்கமாகவே மத்திய அரசை எச்சரித்து உள்ளனர்.
கல்வி நிலையங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில் இந்தி மொழி கட்டாயம் என்பது தொடங்கி பல்வேறு பரிந்துரைகளை அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற ஆய்வுக் குழு வழங்கி உள்ளது. இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஒருமைப்பாட்டுக்கு எதிரானது- முதல்வர் ஸ்டாலின்
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், அலுவல் மொழி குறித்த நாடாளுமன்ற குழுவின் அறிக்கையின் 11வது அளவில் மேற்கொள்ளப்பட்ட முன்மொழிவுகள் இந்தியாவின் ஆன்மா மீது பற்றுக்குள்ளானவை. நடைமுறைப்படுத்தினால் பரந்த இந்தி பேசாத மக்கள் தொகை தங்கள் சொந்த மண்ணில் இரண்டாம் தர குடிமகன்களாக்கப்படுவார்கள். இந்தியை திணிப்பது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு எதிரானது. கடந்த காலத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள பாஜக அரசு நன்றாக செய்யும் என எச்சரித்திருந்தார்.

சோவியத் போல சிதறும்- வைகோ
மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ வெளியிட்ட அறிக்கையில்,இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே பண்பாடு என்று கூப்பாடு போட்டு வரும் இந்துத்துவ சக்திகள், இந்து ராஷ்டிரத்தை கட்டி எழுப்பி, "ஒரே மொழி; அது சமஸ்கிருதம் அல்லது அதன் சாயலில் உள்ள இந்தி மொழி" என்பதை நிலைநாட்ட ஆட்சி அதிகாரத்தின் துணைகொண்டு கட்டாயமாக திணிக்க முனைந்து இருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது. அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 22 மொழிகளுக்கும் சம வாய்ப்பு, சம உரிமை வழங்கி, நாட்டின் ஆட்சி மொழி மற்றும் அலுவல் மொழிகள் ஆக்கிட வேண்டும். அப்போதுதான் நாட்டின் ஒருமைப்பாடு நிலைக்கும்.இல்லையெனில் மொழித் திணிப்பால் சோவியத் யூனியன் வீழ்ந்த நிலைதான் இந்தியாவிலும் ஏற்படும் என கூறியுள்ளார்.

பல நாடுகள் பிறக்கும் -சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமது அறிக்கையில், இந்தியா ஒரே நாடாக இருக்க வேண்டுமென்றால், இந்நாட்டிலுள்ள தேசிய இனங்களின் மொழிகள் யாவும் அங்கீகரிக்கப்பட்டு, அவற்றிற்குரிய முன்னுரிமையும், முதன்மைத்துவமும் அளிக்கப்பட வேண்டும். மாறாக, இந்தி எனும் ஒரே மொழிதான் அதிகாரத்திலிருந்து ஆதிக்கம் செலுத்துமென்றால், இங்கு பல நாடுகள் பிறக்க நேரிடுவதை ஒருபோதும் தவிர்க்க இயலாது என உறுதிபடத் தெரிவிக்கிறேன். இத்தோடு, பாகிஸ்தான் நாடு செய்திட்ட மொழித்திணிப்பினால்தான் வங்காளதேசம் எனும் நாடு இந்தியாவின் துணையோடு பிறந்ததெனும் வரலாற்றுச்செய்தியை இச்சமயத்தில் நாட்டையாளும் ஆட்சியாளர்களுக்கு நினைவூட்டுகிறேன் என கூறியுள்ளார்.

பெரியார், அண்ணாவின் தமிழ்நாடு- திராவிட நாடு முழக்கம்
1938-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தி திணிப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதை தமிழ்நாடு கடுமையாக எதிர்த்து போராடியது. இந்தி திணிப்பு எதிர்ப்பு போர்க்களத்தில் முதல் உயிர் பலிகளாக நடராஜன், தாளமுத்து செத்து மாண்டனர். அப்போது தமிழ்நாடு தனிநாடு என்ற முழக்கத்தை தந்தை பெரியார் முன்வைத்தார். அதாவது தமிழ்நாடு தமிழருக்கே என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முழக்கத்தை முன்வைத்தார். தந்தை பெரியாரைத் தொடர்ந்து பேரறிஞர் அண்ணாவும், தமிழ்நாடு பிரிந்து செல்வதற்கான காரணங்கள் உயிரோடு இருக்கின்றன; ஆனாலும் திமுக தென்னிந்திய மாநிலங்களை உள்ளடக்கிய திராவிட நாடு பிரிவினை கோரிக்கையை கைவிடுவதாக அறிவித்தார். இந்த தலைவர்கள் வழியே நின்று மத்திய பாஜக அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக தலைவர்கள் இந்திய ஒற்றுமைக்கு வேட்டு என்ற எச்சரிக்கை முழக்கத்தை முன்வைத்திருப்பது வட இந்தியாவை அதிரவைத்திருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications