எவ்வளவு போராட்டம், பதைபதைப்பு.. தமிழகத்தில் கொரோனா பரவி இன்றோடு ஒரு வருடம்.. தற்போது நிலை என்ன?
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இன்றோடு ஒரு வருடம் ஆகிறது. ஒரு வருடத்தில் தமிழகத்தில் மோசமான கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு, தற்போது பெரிய அளவில் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
2019ம் வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் இருக்கும் வுஹன் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக உலக நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவையும் தாக்கியது. இந்தியாவில் கடந்த 2020 ஜனவரியில் கொரோனா பாதிப்பு தொடங்கியது.
அதன்பின் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 2020ம் வருடம் மார்ச் 7ம் தேதி தமிழகத்தில் முதல் கொரோனா கேஸ் பதிவானது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இன்றோடு ஒரு வருடம் ஆகிறது.

எப்படி?
ஓமனில் இருந்து காஞ்சிபுரத்திற்கு திரும்பி வந்த நபருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் வேகமாக தமிழகம் முழுக்க கொரோனா கேஸ்கள் பதிவானது. கடந்த வருடம் ஜூலை 27ம் தேதி தமிழகத்தில் மிக அதிக அளவில் ஒரே நாளில் 6,993 கேஸ்கள் பதிவானது. கடந்த வருடம் ஜூலை மாதம் 31ல் தமிழகத்தில் கொரோனா உச்சம் தொட்டது.

ஜூலை
அன்றுதான் தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 57968ஐ தொட்டது. அதன்பின் ஆக்டிவ் கேஸ்களில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டது. கொரோனா கேஸ்கள் காரணமாக தமிழ்கத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் பதிவான கொரோனா கேஸ்களில் 88% அறிகுறி இல்லாத கேஸ்கள் ஆகும்.

கோயம்பேடு
கோயம்பேடு கிளஸ்டர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களில் தமிழகத்தில் கொரோனா பரவியது. கோயம்பேடு கிளஸ்டர்தான் தமிழகடத்தில் அதிக அளவில் கொரோனா கேஸ்கள் பரவ காரணமாக இருந்தது. 84% சதவிகித கொரோனா மரணங்கள் தமிழகத்தில் பிற உடலுபாதைகள் இருந்ததால் ஏற்பட்டது. ஜூலை மாதத்திற்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா கேஸ்கள் குறைய தொடங்கியது.

சரிவு
ஆக்டிவ் கேஸ்கள் குறைய தொடங்கியதோடு ஒவ்வொரு மாவட்டங்களிலும் புதிய கேஸ்கள் குறைந்தது. அதோடு டிஸ்சார்ஜ் செய்யப்படும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தது. தமிழகம் முழுக்க 85 கொரோனா சோதனை மையங்கள் வைக்கப்பட்டு துரிதமாக சோதனைகள் செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் கொரோனா பெரிய அளவில் கட்டுக்குள் வந்தது.

மொத்தம்
தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 854554 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 3952 பேர் தமிழகத்தில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளாக உள்ளனர். 8,38,085 பேர் இதுவரை தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 12517 பேர் இதுவரை கொரோனா காரணமாக தமிழகத்தில் பலியாகி உள்ளனர்.

சென்னை
சென்னையில் அதிகபட்சமாக 2,36,728 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இதில் 2,30,708 பேர் குணமடைந்த நிலையில் 1860 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். 4160 பேர் சென்னையில் மட்டும் இதுவரை கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். மற்ற மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை ஏற்பட தொடங்கி உள்ள நிலையில் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications