ரூபாய் நோட்டுகளில் கடவுள்! ஓட்டுக்காக ஒற்றுமைக்கு வேட்டு! கெஜ்ரிவால் மீது முஸ்லீம் லீக் பாய்ச்சல்!
சென்னை: ரூபாய் நோட்டுக்களில் லட்சுமி, விநாயகர் படங்களை சேர்க்க வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியிருப்பது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல் என தமிழ்நாடு முஸ்லீம் லீக் விமர்சித்துள்ளது.
குஜராத் உட்பட பல மாநில தேர்தல்களை மனதில் கொண்டு இந்துக்களின் வாக்குகளை அறுவடை செய்வதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் இவ்வாறு கூறியிருப்பதாக தமிழ்நாடு முஸ்லீம் லீக் தலைவர் முஸ்தபா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
கடவுள் படங்கள்
புதிய ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்துடன் லட்சுமி, விநாயகர் படங்களையும் சேர்க்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இனி அச்சிடப்படும் புதிய ரூபாய் நோட்டுகளில் ஒருபுறம் மகாத்மா காந்தியின் படமும் மறுபுறம் லட்சுமி மற்றும் விநாயகரின் படங்களையும் சேர்க்க வேண்டும். ரூபாய் நோட்டுகளில் கடவுகளின் படங்களை சேர்ப்பது நாடு செழிக்க உதவும். நாம் என்ன தான் முயற்சி செய்தாலும் கடவுள் அருள் இல்லையென்றால் பலன் அளிக்காது" என பேசியுள்ளார்.
கெஜ்ரிவால் கருத்து
அதுமட்டுமின்றி, கடந்த சில மாதங்களாக இந்திய பொருளாதாரம் நலிவடைந்து வருவதாக தெரிவித்த அவர், இந்தோனேசிய ரூபாயில் விநாயகர் படம் இருப்பதை குறிப்பிட்டார். அவர்கள் ஒரு இஸ்லாமிய நாடு, 80% இஸ்லாமியர்களை கொண்ட நாடு அவர்களால் அதை செய்ய முடியும் என்றால் நம்மாலும் செய்ய முடியும் என குறிப்பிட்டார். மேலும் இது குறித்து 2 நாட்களில் பிரதமருக்கு கடிதம் எழுதவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மொழி, இனம், கலாச்சாரம்
மதசார்பற்ற நாடாக உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்கி வரும் இந்தியாவில் பல்வேறு மொழி, இனம், கலச்சாரம் என பன்முக தன்மை கொண்டாதாக உள்ளது. மாநிலத்திற்கு மாநிலம் மொழி, இனம், கலாச்சாரம் என பலவகையில் பிரிந்து கிடந்தாலும், வேற்றுமையிலும் ஒற்றுமையுடன் இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் வாழ்ந்து வருகிறார்.
தமிழ்நாடு முஸ்லிம் லீக்
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த நாட்கள் முதல் இஸ்லாமிய, கிறிஸ்துவ ஏன் தலித் மக்களுக்கு கூட இந்தியாவில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. ஓரே மதம் என்பதை நோக்கி பாஜக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இதற்கு ஆதரவு தரும் வகையில், ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் படங்களை சேர்க்க வேண்டும் டெல்லி முதல்வர் அரவிந்த் ஜெக்ரிவால் பேசியிருப்பதை தமிழ்நாடு முஸ்லிம் லீக் வன்மையாக கண்டிக்கிறது.
குஜராத் தேர்தல்
ஒற்றுமை உணர்வோடு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களிடையே பிரிவினையும் ஏற்படுத்தும் வகையில் ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் படங்களை அச்சிடு வேண்டுமென அரவிந்த் ஜெக்ரிவால் பேசியிருப்பது, விரைவில் குஜராத் உள்பட பல மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் இந்துக்களின் வாக்குகளை குறிவைத்து வைக்கப்பட்ட கோரிக்கையாக தெரிகிறது.
ஒற்றுமைக்கு வேட்டு
நாட்டில் மக்களிடையே பிரிவை ஏற்படுத்தும் வகையிலும், இந்திய போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு வேட்டு வைக்கும் செயலில் ஈடுபட்டுள்ள அரவிந்த் ஜெக்ரிவால் ரூபாய் நோட்டு தொடர்பாக கூறியிருந்த கருத்தை திரும்ப பெற வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.