தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடத்துவதா?.. வேண்டாமா?.. கருத்து கேட்ட பிறகு முடிவு.. அமைச்சர்
சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை நடத்துவதா இல்லை ரத்து செய்வதா என்பது குறித்து அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் இரு தினங்களுக்குள் கேட்டபிறகு முடிவெடுக்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனாவின் இரண்டாவது அலை பரவியதை அடுத்து 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை சிபிஎஸ்இ நிர்வாகம் ஒத்தி வைத்தது. அது போலவே மற்ற மாநிலங்களுக்கு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்தி வைத்தன.
கொரோனா பரவலுக்கு மத்தியில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு தேர்வுகளை நடத்துவது என்பது குறித்து அண்மையில் மாநில அரசுகளுடன் மத்திய கல்வித் துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியது.
இந்த கூட்டத்திற்கு பின்னர் மாநில அரசுகளின் ஆலோசனைகளையும் கருத்துகளையும் மத்திய அரசு கேட்டது. இந்த நிலையில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு தொடர்பாக இறுதி முடிவை எடுக்க நேற்றைய தினம் பிரதமர் மோடி கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மாணவர்கள் நலனே முக்கியம்.. சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து - பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு
இந்த கூட்டத்திற்கு பிறகு, மாணவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வதாக மோடி அறிவித்தார். இந்த நிலையில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசு எடுக்கும் முடிவை பொறுத்தே மாநில அரசும் பிளஸ் 2 தேர்வு நடத்துவது குறித்து ஒரு முடிவை அறிவிக்கும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடத்தலாமா ரத்து செய்யலாமா என்பது குறித்து இன்றைய தினம் பள்ளிக் கல்வித் துறை உயரதிகாரிகளுடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலினுடனும் அன்பில் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கு பின்னர் அமைச்சர் அன்பில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் மாணவர்களின் உடல்நலனும் பாதுகாப்பும் முக்கியமானது என்றும் கல்வியாளர்கள், மருத்துவர்கள், பெற்றோரிடம் கருத்து கேட்பு நடத்தி இரு தினங்களுக்குள் முடிவு செய்ய முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
[email protected] என்கிற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 14417 என்ற தொலைபேசி எண்ணுக்கோ ஆலோசனைகளை தெரிவிக்கலாம். பிளஸ் 2 தேர்வின் மதிப்பெண்களும் முக்கியம் என்பதால் இதை கவனமாக கையாள வேண்டும். பிளஸ் 2 தேர்வு குறித்து மாணவர்களிடையே இரு வேறு கருத்துகள் உள்ளன. நீட் தேர்வு உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள் குறித்தும் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும். எனவே தேர்வை நடத்துவதா வேண்டாமா என்பதை ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும். என்றார் அமைச்சர் அன்பில்.