காத்திருக்கிறோம்.. விரைவில் பதிலடி கொடுப்போம்.. தமிழக போலீஸாருக்கு பயங்கரவாதிகள் தமிழில் மிரட்டல்
சென்னை: தமிழக கியூ பிரிவு போலீஸாருக்கு பயங்கரவாதிகள் தமிழில் மிரட்டல் விடுத்துள்ளனர். அதில் காத்திருக்கிறோம், விரைவில் பதிலடி கொடுப்போம் என தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதிகளுக்கு இந்திய எல்லையில் நம் முப்படையினர் பதிலடி கொடுத்து அவர்களை புறமுதுக்கிட்டு ஓட செய்கின்றனர். அந்த வகையில் தமிழக போலீஸாரும் இந்த பணியை செய்து வருகின்றனர்.
ஆம், தமிழக கியூ பிரிவு போலீஸாரும், சிறப்பு புலனாய்வு துறை போலீஸாரும், பெங்களூர் கிரைம் பிரிவு போலீஸாரும் இணைந்து கடந்த ஜனவரி மாதம் பயங்கரவாத அமைப்புகளை வேட்டையாடினர்.

3 பேர் கைது
இந்த தேடுதல் வேட்டையில் 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அது போல் டெல்லியில் தீவிரவாதி காஜாமொய்தீன் கைது செய்யப்பட்டார். பெங்களூருவில் அவரது ஆதரவாளர்கள் 3 பேர் துப்பாக்கிகளுடன் கைது செய்தனர். இதற்கு பயங்கரவாதிகள் உடனடியாக பதிலடி போலீஸாருக்கு கொடுத்தனர்.

தலைமறைவு
அதன்படி கன்னியாகுமரியில் களியக்காவிளை சோதனை சாவடியில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வில்சன் கடந்த ஜனவரி மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் என கருதப்படும் அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோரை போலீஸார் கர்நாடக மாநிலத்தில் தலைமறைவாக இருந்த அவர்களை கைது செய்தனர்.

மிரட்டல் கடிதம்
இந்த நிலையில் ட்விட்டரில் ஒரு அதிர்ச்சிகரமான கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த கடிதம் தமிழில் வெளியாகி உள்ளது. அல்ஹந்த் என பயங்கரவாத இயக்கம் இந்த கடிதத்தை உருவாக்கி உள்ளது. அந்த இயக்கமானது டெலிகிராம் செயலி மூலம் முதலில் இந்த கடிதத்தை வெளியிட்டுள்ளது. இதையடுத்து அந்த கடிதம் ட்விட்டரில் போடப்பட்டுள்ளது.

பதிலடி கொடுப்பதாக சூளுரை
2 நவீன துப்பாக்கிகள், கையெறி குண்டுகளுக்கு மத்தியில் தமிழில் அந்த வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் டெல்லி சிறப்பு பிரிவு, கியூ பிரிவு போலீஸாரை மிகவும் அவதூறான வார்த்தைகளில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் நாங்கள் காத்திருக்கிறோம். விரைவில் பதிலடி கொடுப்போம் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதை தமிழ் தெரிந்த பயங்கரவாதிகள் வெளியிட்டிருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications