வைகோவை முதல்ல அறிவாலயத்துக்குள்ளே விடுவாங்களா... தமிழிசை கேள்வி
வைகோ அறிவாலயத்துக்குள் நுழைய முடியுமா என தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை: "வைகோவால என்ன செய்ய முடியும்? முதல்ல அவரை அறிவாலயத்துக்கு உள்ளே விடுவாங்களா, மாட்டாங்களான்னே தெரியல" என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. இதற்காக அனைத்து கட்சிகளும் மும்முரமாக இறங்கி உள்ளனர்.
இந்த தேர்தலில் போட்டியிடுவது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் தமிழிசை சவுந்தராஜனிடம் கேட்டார்கள். அப்போது அவர் அளித்த பதில்கள்தான் இவை:
தமிழகம் வருகை
திருவாரூர் இடைத்தேர்தலை எப்படி எதிர்கொள்வோம் என்று நாங்கள் இன்னும் அறிவிக்கவில்லை. இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டுமா? அப்படி போட்டியிட்டால், அதனை எப்படி எதிர்கொள்வது என இனிதான் முடிவு செய்வோம். இப்போதைக்கு எங்கள் முழு கவனம் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரப்போகிறார்.
எய்ம்ஸ் மருத்துவமனை
விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது. அந்த தேர்தலில் எப்படியும் காங்கிரஸ்- திமுக கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன்தான் நாங்கள் கூட்டணி அமைக்க வாய்ப்பு நிறையவே உள்ளது. தமிழகம் வரும் பிரதமர் கட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாது, பல தனி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள போகிறார். அதோடு எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அடிக்கல் நாட்டு விழாவிலும் அவர் பங்கேற்கவும் வாய்ப்பு உள்ளது" என்றார்.
என்ன செய்ய முடியும்?
உடனே செய்தியாளர்கள், தமிழகம் வரும் பிரதமருக்குதான் கருப்புகொடி காட்டப்போவதாக வைகோ சொல்லி இருக்கிறாரே என்று கேட்டனர். அதற்கு தமிழிசை, "வைகோவால் என்ன செய்ய முடியும்? ஒன்றுமே செய்ய முடியாது. அவரை முதலில் அறிவாலயத்துக்குள் விடுவார்களா? மாட்டார்களா? என்றே சந்தேகமாக உள்ளது. முதலில் அதனை போக்க எதையாவது செய்ய வேண்டும்.
தப்பு கணக்கு
பிரதமருக்கு கருப்புகொடி காட்டிவிட்டால், ராகுல்காந்தி சந்தோஷப்படுவார், அதனால் நம்மை கூட்டணியில் சேர்த்துக்கொள்வார்கள் என்று வைகோ கணக்கு போடுகிறார். ஆனால் எப்பவுமே அவர் போடும் கணக்கு எல்லாமே தப்புதான்" என்று பதிலளித்தார்.