யாகம் நடத்தலாமே.. என்ன தப்பு.. ஓ.பி.எஸ்ஸுக்காக வரிந்து கட்டி வரும் தமிழிசை!
யாகம் நடத்தினால் என்ன தவறு? தமிழிசை சவுந்தராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை: யாகம் நடத்தினால் அதில் என்னதான் தப்பு என்று வரிந்து கட்டிக் கொண்டு அதிமுகவுக்கு சப்போர்ட் செய்துள்ளார் தமிழிசை சவுந்தரராஜன்.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறையில் நேற்று அதிகாலை யாகம் நடத்தப்பட்டதாக தகவல்கள் பரவின. இந்த யாகத்தை செய்ய நேற்று முன்தினமே அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது.
எதற்காக யாகம் நடத்தப்பட்டது என்பது தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முக்கியமாக இந்த விஷயத்தில் அதிமுக தரப்பிலேயே குழப்பம் தொடங்குகிறது. தன்னுடைய அறை புதுப்பிக்கப்பட்டதால்தான் யாகம் நடத்தப்பட்டது என்று இன்றைக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.
எதற்காக மறுத்தார்?
ஆனால் அமைச்சர் ஜெயக்குமாரோ, அப்படி ஒரு யாகம் நடக்கவே இல்லை என்று நேற்று செய்தியாளர்களிடடம் பேசினார். இதில் யார் சொல்வது உண்மை என தெரியவில்லை. விவகாரத்தில் தொடர்புடையவரே யாகம் நடத்தியதை ஒப்புக் கொண்டபோது, எதற்காக ஜெயக்குமார் இதை மறுத்தார் என்றும் புரியவில்லை.
ஸ்டாலின் கேள்வி
இதற்கு நடுவில் சம்பந்தமே இல்லாமல் இந்த விஷயத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்ளே நுழைவது ஏன் என்று பார்த்தால், யாகம் சம்பந்தமாக ஸ்டாலின் ஒரு விஷயத்தை கொளுத்தி போட்டிருந்தார். அதாவது, "ஊழல் வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு போனதுபோல், கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி சிறைக்கு சென்றுவிட்டால், அப்போது முதல்வர் பதவி காலியாகும், அதனை கைப்பற்றத்தான் ஓ.பன்னீர்செல்வம் யாகம் நடத்துகிறாரா" என்ற ஒரு கேள்வியை கேட்க, அந்த யாகம் விவகாரம் இன்னும் கொழுந்துவிட்டு எரிந்தது.
திருமா ஜால்ரா
இப்போது இந்த விஷயத்தில் தமிழிசை மூக்கை நுழைத்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், "சட்டமன்றத்திற்குள் கலகம் செய்த கழகம் தலைமைச் செயலகத்துக்குள் யாகம் செய்தால் மரபு மீறலா? சட்டமன்றத்துக்குள் வேட்டி சேலை கிழிப்பு, மைக், மேஜை, மண்டைஉடைப்பு, போட்டி சட்டமன்றம், ஜெ.மீது தாக்குதல் என சட்டமன்ற மரபை காத்த?? திமுகவின் குற்றசாட்டு.... நடக்காத யாகத்தைப்பற்றி..அதற்கு வீரமணி திருமா ஜால்ரா" என்று பதிவிட்டுள்ளார்.
|
என்ன தவறு?
இன்னொரு பதிவில், "வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை பெற்ற அரசின் அமைச்சர் அறையில் பெரும்பான்மை மக்கள் நம்பும் யாகம் நடந்தால் என்ன தவறு? இந்து மத எதிர்ப்பாளர்கள் விமர்சிப்பது உள்நோக்கம் கொண்டது. இந்து மதத்தை விமர்சிப்பது போல் பிற மதசடங்குகளை விமர்சிப்பார்களா?" என்று பதிவிட்டுள்ளார்.
குழப்புகிறார்
இந்த பதிவின் மூலம் தமிழிசை என்ன சொல்ல வருகிறார்? என தெரியவில்லை. சம்பந்தப்பட்டவரே யாகம் நடத்தினேன் என்று சொல்லும்போது எதற்காக இப்படி வக்காலத்து என யோசிக்க வைக்கிறது. அதிலும் முதல் பதிவில் யாகம் நடத்தவில்லை என்கிறார், இரண்டாம் பதிவில் யாகம் நடத்தினால் தவறில்லை என்கிறார்? அமைச்சர் ஜெயக்குமாரை விட அதிகமாகவே நம்மை தமிழிசை குழப்பி விட்டுள்ளார்.
கூட்டணிக்கு அஸ்திவாரமா?
ஒன்றுக்கு இரண்டு ட்விட்டர்களை போட்டு அதிமுகவுக்கு தனது ஆதரவு இன்னமும் இருக்கிறது என்கிறாரா? அல்லது கூட்டணிக்கு மீண்டும் அடி போடுகிறாரா? அல்லது ஸ்டாலின் கருத்து சொன்னால், அதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று தானும் கருத்தை பதிவிட்டுள்ளாரா?.. ஒன்னும் புரியலை!