5 ஆயிரம் செவிலியர்கள் பணி நிரந்தரம்.. கலந்தாலோசிப்பதாக உறுதியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை: தற்காலிகமாக பணியாற்றும் 5 ஆயிரம் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியுமா என்பதை கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவத் தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 12 ஆயிரத்திற்கும் அதிகமான செவிலியர்கள் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி திடீரென ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

செவிலியர்கள் கைது
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், போராட்டத்தை கைவிட மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஏராளமான செவிலியர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இதனால் ஓமந்தூரார் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

செவிலியர்களுக்கு அரசு துணை நிற்கும்
இதுகுறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தபோது, தகுதியுடைய செவிலியர்கள் நிச்சயமாக பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அரசின் நிதிநிலையைப் பொறுத்துதான் இந்தப் பணிகளை முடிவுக்கு கொண்டு வர முடியும். செவிலியர்களுக்கு அரசு எப்போதும் துணை நிற்கும் என்று தெரிவித்தார்.

செவிலியர்கள் சங்கம் குறித்து அமைச்சர்
இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் தரப்பில் இருந்து யாரும் தங்களை சந்திக்கவில்லை என்று மா.சுப்பிரமணியன் கூறினார். அதேபோல், தமிழகத்தில் 8 செவிலியர்கள் சங்கம் இருக்கின்றனர். அவர்களில் யார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவில்லை. யாருடைய தூண்டுதலின் பேரிலும் செவிலியர்கள் தங்களது உடலை வருத்திக்கொண்டு வெயிலில் போராட வேண்டாம் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார்.

செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை
இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் தரப்பில் 7 பேர் கொண்டு குழுவினருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, 2020ஆம் ஆண்டு வரை செவிலியர்களாக பணியாற்றிய 5 ஆயிரம் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளோம். இதனை செயல்படுத்த நிதி ஆதாரங்கள் தேவை. இன்னும் சில மாதங்களில் பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

போராட்டத்தை கைவிட மறுப்பு
இதனைத்தொடர்ந்து செவிலியர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற மறுப்பு தெரிவித்துள்ளனர்.ஒருவேளை அமைச்சர் கூறியதை எழுத்துப்பூர்வமாக கொடுத்தால் போராட்டம் வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications