அருமை...அற்புதம்...அபாரம்... அன்பில் மகேஷ் பொய்யாமொழியை குட்டிப்பேப்பரில் தட்டி கொடுத்த ஸ்டாலின்
தமிழக சட்டசபையில் நேற்றைய தினம் பேசிய பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷை முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
சென்னை: சட்டசபையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, துறை ரீதியாக புள்ளி விவரங்களுடன் எந்தவிதமான குறிப்புகளுமின்றி, பேப்பர் எதையும் பார்க்காமல் பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதனை முதல்வர் மு.க ஸ்டாலின் பாராட்டியுள்ளார். தம்பி மகேஷ் அருமை...அற்புதம்...அபாரம் என்று குறிப்பு எழுதியுள்ளார்.
தமிழக சட்டசபையில் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்பிறகு, தள்ளி வைக்கப்பட்ட சட்டப்பேரவை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்த கூடியுள்ளது.
மே மாதம் 10ஆம் தேதி வரை நடக்கும் கூட்டத்தொடரில் துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் விவாதம் நடைபெற்று வருகின்றன. பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை விவாதம் நேற்று நடைபெற்றது.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அப்போது, பதிலுரைத்த அத்துறையின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. திமுக ஆட்சியில் தான் பள்ளிக்கல்வி துறைக்கு 36895 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். மீன் கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக்கொடுப்பது தான் திராவிட மாடல் என்று முதலமைச்சர் செயல்படுவதாக குறிப்பிட்டார்.

சமூக நீதி
அனைவருக்கும் தேநீர் கொடுங்கள் என்றார் மார்க்ஸ்; சமமான அளவு கொடுங்கள் என்றார் பெரியார். ஒரே வகையான குவளையில் கொடுங்கள் என்றார் அம்பேத்கர். பசியுடன் இருப்பவர்களுக்கு முதலில் கொடுங்கள் என்றார் கலைஞர். தேநீரையும் குவளையும் இலவசமாக கொடுங்கள் என்கிறார் நம்முடைய முதல்வர் ஸ்டாலின். முதல்வரின் இந்த பேச்சை கேட்கும் போது இது தான் சமூக நீதி என்று எங்களால் நெஞ்சை உயர்த்தி கூற முடியும் என்று கூறினார்.

குட் டச் பேட் டச்
ஆசிரியர்கள் மாணவர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்றும், குட் டச் பேட் டச் என்றால் என்ன என்றும் பயிற்சி அளிக்கப்படுவதாக தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நவீன முறையில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பாடம் நடத்துவதற்கு ஆசிரியர்களுக்கும் பயற்சி அளிக்கப்படுகிறது என்றார்.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
தொடர்ந்து பேசிய அமைச்சர், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. 47 லட்சத்தில் இருந்து 53 லட்சமாக உயர்ந்துள்ளது. இதனால் 6 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளை தேடி வந்த சூழல் உருவாகியுள்ளது, 15 முதல் 18 வயதுள்ள 33 லட்சம் மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அருமை, அற்புதம், அபாரம்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எந்தவிதமான குறிப்புகளுமின்றி, துறை ரீதியாக புள்ளி விவரங்களுடன் டேட்டாக்களை அடுக்கினார். பேப்பர் எதையும் பார்க்காமல் கொஞ்சம் கூட தடுமாறாமல் பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இன்றைக்கு எதிர்க்கட்சிகளே அன்பில் மகேஷின் பேச்சை பார்த்து வாயடைத்து போயுள்ளனர். பலரும் அவரது பேச்சை ரசித்து கேட்டனர். அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பேச்சை பேரவையில் வியந்து கேட்ட முதல்வர் ஸ்டாலின், 'அருமை, அற்புதம், அபாரம்' என்று தன் கைப்பட பேப்பரில் எழுதிக் கொடுத்து அவையில் வைத்தே பாராட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications