ஜல்லிக்கட்டில் ஜெயித்தவர்களுக்கு கார் எதற்கு? பெட்ரோல் போட முடியுமா? தங்கர் பச்சான் கேள்வி
சென்னை: ஜல்லிக்கட்டுப் போட்டியில் அதிக காளைகளை அடக்கி வெற்றி பெறும் வீரருக்கு காருக்குப் பதில் உழவுத் தொழில் தொடர்பான கருவிகளை வழங்க வேண்டும்' என இயக்குநர் தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலக அளவில் பிரசித்தி பெற்றது.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் காளைகளுக்கும் வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். அதுபோல் இந்த மூறை அவனியாபுரம் உள்ளிட்ட போட்டிகளில் ஒவ்வொரு காளைக்கும் ஒரு தங்கக்காசு கொடுக்கப்பட்டது. அதோடு, சேர், பீரோ, கட்டில்களும் கொடுக்கப்பட்டன.
2 சின்ன பசங்க இருக்காங்களே.. தனுஷ் - ஐஸ்வர்யா குழந்தைகளின் கஸ்டடி யாருக்கு? சட்டம் சொல்வது என்ன?
கார் பரிசு
தங்கக்காசு, மோதிரம் தொடங்கி அதிக காளைகளை அடக்கும் வீரர்களுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. இந்த முறை முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பாகவும், எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் சார்பாகவும் வெற்றி பெற்றவர்களுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டுப் போட்டியில் அதிக காளைகளை அடக்கி வெற்றி பெறும் வீரருக்கு காருக்குப் பதில் உழவுத்தொழில் தொடர்பான கருவிகளை வழங்கவேண்டும் என இயக்குநர் தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார். தங்கர் பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில் ''வீரர்கள் உயிரைப் பணயம் வைத்து பங்குபெறும் இப்போட்டிகளை நடத்துவதில் ஒவ்வொரு தமிழரும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றோம்.
அரசு சிந்திக்க வேண்டும்
இப்போட்டியில் வென்றவர்களை ஊக்குவிக்கும் விதமாக வழங்கப்படும் பரிசுகள் குறித்து இப்பொழுதாவது அரசு சிந்திக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே இதேபோல் காரினைப் பரிசாகப் பெற்ற வீரர்கள் எந்த அளவுக்கு வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார்கள். எந்த மாதிரியான வாழ்க்கையை இப்போது அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
மாடு கொடுங்கள்
காரின் தொகைக்கு ஈடாக அந்த வீரனுக்கு உழவுத் தொழில் தொடர்பான கருவிகள், மாடுகள், நிலம் இவைகளைத் தந்து அவருடைய வாழ்வுக்கு முன்னேற்றம் ஏற்படுத்தித் தந்தால் இன்னும் கூடுதலான மகிழ்ச்சியை நாம் அடையலாம். பரிசு தரும் காரை வைத்துக்கொண்டு பெட்ரோல், டீசல் விற்கும் விலையில் அதற்கு செலவழிப்பதற்காகவே அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் போராட வேண்டியிருக்கும்.
கோரிக்கை
இதை நாமும் அரசாங்கமும் எண்ணிப் பார்க்கவேண்டும். தயவு கூர்ந்து முதலமைச்சர் இக்கோரிக்கைக் குறித்து சிந்தித்து செயல்படுத்த வேண்டும்'' என கூறியிருக்கிறார். என்று அறிக்கையில் கூறியுள்ளார். தமிழக அரசு இதுகுறித்து சிந்திக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டுத் தெரிவித்துள்ளார். இந்த கோரிக்கை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது. ஆனால், கிராமங்களிலுள்ளவர்களும் காரை பயன்படுத்த ஜல்லிக்கட்டு போட்டி ஒரு பாலமாக இருக்கிறது. அதை கெடுக்க வேண்டுமா, என்ற குரல்களும் எழுவதை பார்க்க முடிகிறது.