தந்தை பெரியார் நூல்கள் நாட்டுடைமையாகுமா? திராவிடர் இயக்கங்களுக்குள் கருத்து வேறுபாடு
சென்னை: தந்தை பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று திமுகவை ஆதரிக்கும் திராவிடர் விடுதலை கழகம் வலியுறுத்தி உள்ளது. ஆனால் பெரியார் நூல்களை நாட்டுடையாக்குவதற்கு திமுகவை ஆதரிக்கும் மற்றொரு திராவிடர் இயக்கமான திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவிக்கிறது.
தமிழறிஞர்கள் பலரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. இதேபோல் தந்தை பெரியார் நூல்களும் நாட்டுடைமையாக்கப்பட வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை.
திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறி பெரியார் திராவிடர் கழகம் என்கிற அமைப்பு உருவான போது, தந்தை பெரியார் 1925-ம் ஆண்டு முதல் 1928-ம் ஆண்டு வரை நடத்திய குடி அரசு ஏட்டில் வெளிவந்த பேச்சுகள், எழுத்துகளை தொகுத்து வெளியிட்டனர். அதை எதிர்த்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நாட்டுடைமையாக்குவதில் சிக்கல் ஏன்?
திராவிடர் கழகத் தலைவர் வீரமணியை பொறுத்தவரையில், பெரியார் நூல்களை எல்லோரும் வெளியிட்டால் கொள்கை குழப்பம் வரும் என்பது அவரது கருத்து. ஆனால் திராவிடர் கழகத்தின் தலைமையகமான பெரியார் திடலிலேயே தந்தை பெரியார் நடத்திய பத்திரிகைகள் இல்லை என்பது அங்கிருந்து வெளியேறியவர்கள் கருத்து. இதனால் தந்தை பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
பெரியார் நூல்கள்
தந்தை பெரியாரின் நூல்களை, எழுத்துகளை தொகுக்கும் பணியில் மறைந்த வே.ஆனைமுத்து, மறைந்த பேராசிரியர் செ.அ.வீரபாண்டியன் மற்றும் தஞ்சை ரத்தினகிரி ஆகியோர் முக்கியமானவர்கள். மறைந்த வே.ஆனைமுத்து, பெரியார் உயிருடன் இருந்த காலத்திலேயே அவரது அனுமதியுடன் வெளியிட்ட பெரியார் சிந்தனைகள் தொகுப்புகள்தான், தந்தை பெரியார் குறித்த புரிதல்களை இன்றளவும் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறது. திருச்சியில் பெரியார் மய்யம் என்ற பெயரில் இயக்கம் நடத்திய காலம் முதல் 1990களின் பிற்பகுதி வரை மறைந்த செ.அ. வீரபாண்டியன், தஞ்சை ரத்தினகிரி, மருதவாணன் உள்ளிட்டோர் பெரியார் நூல்களை தொகுக்கும் முயற்சியில் முனைப்பு காட்டினர். வீரபாண்டியன், தஞ்சை ரத்தினகிரி மற்றும் தஞ்சை மருதவாணன் ஆகியோரும் பெரியார் நடத்திய இதழ்களை பல்வேறு இடங்களில் வாங்கி சேகரித்தனர். 1980களின் தொடக்கத்தில் சிதைந்து போன பெரியார் நடத்திய இதழ்களை கையெழுத்தில் பிரதியாக்கம் செய்தவர்களுக்கு வழிகாட்டியவர்கள் இவர்கள்.
குடி அரசு ஏடுகள்
பின்னர் திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்த கொளத்தூர் தா.செ. மணி, விடுதலை ராசேந்திரன் உள்ளிட்டோர் தலைமையிலானவர்கள் (பெரியார் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம்) பெரு முயற்சிகளில் குடி அரசு இதழ்கள் வெளியிடப்பட்டு இன்றளவும் அனைவரும் படிக்கக் கூடிய மின்னூல்களாக இருக்கின்றன. தற்போது ஆளும் திமுக அரசை திராவிடர் கழகமும் கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் கழகமும் ஆதரிக்கின்றன. அதேநேரத்தில் பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்ற கோரிக்கையை கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலைக் கழகம் இப்போது வலியுறுத்தி வருகிறது.
நாட்டுடைமையாகுமா?
திராவிடர் இயக்கங்கள் பிளவுபட்டு கி.வீரமணி தலைமைக்கு எதிராக நின்றன. ஆனால் அண்மைக்காலமாக கி.வீரமணியுடன் பிரிந்து போய் புதிய திராவிடர் இயக்க அமைப்புகள் நட்பு பாராட்டி வருகின்றன. இந்த நிலையில் பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்கிற கோரிக்கை மூலம் மீண்டும் திராவிடர் இயக்கங்களிடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.