இன்று பெரியாரின் 144வது பிறந்தநாள்.. சமூகநீதி நாளாக கொண்டாட்டம்.. முதல்வர் ஸ்டாலின் மரியாதை
சென்னை: தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்றைய தினம் அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பகுத்தறிவு பகலவன் என அழைக்கப்படும் தந்தை பெரியாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இவர் ஏற்றத்தாழ்வுகள், பெண் அடிமை, சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, பெண் கல்வி உள்ளிட்டவைகளுக்காக பாடுபட்டவர்.
தனது 18 ஆவது வயது முதல் இறுதி மூச்சு வரை ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர். தீண்டாமை மற்றும் ஜாதி கொடுமையை எதிர்த்து போராட்டம் நடத்தியவர். ஒடுக்கப்பட்ட மக்களளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த இவரது பங்கு அளப்பறியது. ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்து சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார் இந்த பகுத்தறிவு பகலவன்.

ஜாதிய பாகுபாடுகளை களைய தன் இறுதி மூச்சு வரை போராடியவர். இவரது பிறந்த நாள் செப்டம்பர் 17ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என கடந்த ஆண்டு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி இன்றும் அவரது பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடுகிறது.
அவரது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டு பெரியார் சிலைக்கு மலர்த் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இவர் கூறிய பொன்மொழிகளில்- இனிமேல்தான் நமக்காக இலக்கிய தோன்ற வேண்டும். அதில் இந்து மதம், ஆத்திகம், ஆரியம் ஆகிய மூன்றும் இருக்கக் கூடாது. அது போல் கல்வி அறிவும் சுயமரியாதை எண்ணமும் பகுத்தறிவு தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும் என்றார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பிறப்பால் பேதம் கற்பித்து, தீண்டாமை நிலவிய சமூகத்தில், புரட்டுகளுக்குள் புதைந்துகிடந்த அழுக்குகளை அம்பலப்படுத்தி, இந்த மண்ணில் வாழும் பெரும்பான்மையான மக்களும் சுயமரியாதையோடு வாழ்ந்திடும் வரலாற்றைப் படைத்த புரட்சியாளர் தந்தை பெரியார் வழிநடப்போம்! தமிழர் இனமானம் காப்போம் என்றார்.

அது போல் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சமூகத்தில் நிலவிய பழமைவாத கருத்துகளை தகர்த்தெறிந்த பகுத்தறிவாளர், பல்வேறு சமூகநீதி போராட்டங்களை முன்னெடுத்து வென்ற சமத்துவவாதி, பெண்களின் சம உரிமைக்காக போராடிய புரட்சியாளர், தன்னலமற்ற தலைவர் #தந்தை_பெரியார் அவர்களின் 144வது பிறந்தநாளில் அவரின் பெரும்புகழை வணங்கி போற்றுகிறேன் என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அமமுகவினருடன் பெரியார் திருவுருவ படத்திற்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர். ஓபிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பதவி ஆசையில் மிதிக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக்கியத்தனமான காரியத்தையும் செய்யும் வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர்களிடம் சுயநலம் தவிர மனிதப் பற்றோ நாட்டுப் பற்றோ சிறிதளவும் காணமுடியாது என தந்தை பெரியாரின் பொன்மொழிகளை மேற்கோள்காட்டியுள்ளார்.

இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது : சுயமரியாதையும் சமூக நீதியும் வாழ்வியல் நெறியாகக் கொண்டு வாழ்ந்து காட்டிய தந்தை பெரியார் பிறந்த சமூகநீதி நாள் இன்று. பகுத்தறிவே மானுடத்தின் அடிப்படை மாண்பெனப் போதித்த அந்தப் பெருந்தகையின் லட்சியங்களை நிறைவேற்றிட உழைப்போம் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications