வாவ்! இரவை வண்ணமயமாக்கும் 'விண்கல் மழை'.. வெறும் கண்ணிலே பார்க்கலாம்.. தமிழ்நாட்டில் எங்கு தெரியும்?
சென்னை: இந்த ஆண்டின் பிரகாசமான விண்கல் மழையானது தற்போது வானத்தில் பொழிந்துகொண்டிருக்கிறது. இந்த அபூர்வ விண்கல் மழையை தமிழ்நாட்டிலிருந்தும் நம்மால் வெறும் கண்களால் கண்டு ரசிக்க முடியும். இதனை 'ஜெமினிட் விண்கல் மழை' என்று விஞ்ஞானிகள் அழைப்பார்கள்.
பொதுவாக ஆண்டு தோறும் பூமி மீது விண்கற்கள் சிறிய அளவில் விழுவதால் நம்மால் வானத்தில் இதனை பார்க்க முடியும். ஆனால் இது எப்போதாவது ஒருமுறைதான் நிகழும்.
ஆனால் இந்த 'ஜெமினிட் விண்கல் மழை' ஒரு மாதம் முழுவதும் நீடிக்கும் என்பதுதான் இது தனிச்சிறப்பு. மேலும் மற்ற விண்கற்கள் விழுவது வெள்ளையாக தெரியும். இந்த விண்கற்கள் சிவப்பு, பச்சை நிறத்திலும் தெரியும்.

ஜெமினிட் விண்கல் மழை
இந்த பூமியே விண்கற்கள் மோதலால்தான் உருவானது. அப்படி இருக்கையில் மேலே சொன்னது போல தினந்தோறும் பூமியின் மீது விண்கற்கள் தொடர்ந்து விழுந்துகொண்டே இருக்கின்றன. சரி இந்த விண்கற்கள் எங்கிருந்து வருகிறது தெரியுமா? பொதுவாக இப்படியான விண்கற்கள் வால்நட்சத்திரங்களிலிருந்துதான் பூமிக்கு வருகிறது. அதாவது, வால் நட்சத்திரங்கள் சென்ற பாதையில் அது விட்டுச் சென்ற தூசி துகள்கள் இருக்கும். விண்வெளியில் காற்று இல்லாததால் இந்த துகள்கள் எங்கேயும் போகாது. இந்நிலையில் பூமி இந்த துகள்கள் இருக்கும் பாதை அருகே போகும்போது அந்த துகள்கள் புவியீர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு விண்கல் மழையாக பூமியில் விழும்.

வால் நட்சத்திரம்
சமீபத்தில் அப்படி எந்த வால் நட்சத்திரமும் பூமியின் சுற்றுப்பாதையில் சென்றாதாக தெரியவில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அப்புறம் எப்படி 'ஜெமினிட் விண்கல் மழை' சாத்தியம்? என்று நமக்கு தோன்றலாம். இதற்கு காரணம் '3200 பைத்தன்' விண்கல்தான். இந்த கல் பூமியின் சுற்றுவட்டப் பாதையை கடக்கும்போது சில துகள்களை விட்டுச் சென்றிருக்கிறது. அப்படி உள்ள இந்த துகள்கள் நவம்பர் 19ம் தேதியிலிருந்து டிசம்பர் 24ம் தேதிவரை பூமியில் விழும். இதனால்தான் 'ஜெமினிட் விண்கல் மழை' சாத்தியமாகிறது. விண்கல் என்றாலே நமக்கு ஒருவித அச்சம் இருக்கும். ஏனெனில் விண்கல் மோதிதானே ஒரு காலத்தில் டைனோசர்கள் அழிந்து போனது. எனவே தற்போது பெய்யும் விண்கல் மழை பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்தாதா? என்று பலர் கேள்வியெழுப்புகின்றனர்.

விண்கற்கள்
இதற்கும் விஞ்ஞானிகள் பதிலளித்துள்ளனர். அதாவது, "விண்கற்கள் அளவில் சிறியவை. அவை விட்டுச் செல்லும் துகள்கள் அதிலும் மிகச் சிறியவை. தற்போது இந்த துகள்கள்தான் பூமியில் விழுகிறது. விண்கல் அல்ல. மற்றொரு விஷயம் என்னவெனில், பூமியின் மீது விழும் இந்த துகள்கள் பூமியின் வளிமண்டலத்தில் உரசி தீப்பிடித்து எரிந்துவிடும். எனவே இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இது இவ்வாறு தீப்பிடித்து எரிவதன் காரணமாகதான் நமக்கு விண்கல் மழை தெரிகிறது. ஆகவே இதனை வெறும் கண்களால் தாராளமாக பார்க்கலாம்.

எங்கிருந்து பார்க்கலாம்
இது டிசம்பர் 13-14 இரவில் அதிக அளவில் பொழியும். ஒரு மணி நேரத்திற்கு சுமார் 150 விண்கற்கள் பூமியை நோக்கி வரும். இது பார்ப்பதற்கு மிகவும் அற்புதமாக இருக்கும். இதனை தமிழ்நாட்டில் எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்கலாம். ஆனால் ஒளி மாசு குறைவாக உள்ள இடத்தில் இருந்து பார்த்தால் இதன் அழகை முழுமையாக ரசிக்கலாம். சென்னைக்கு அருகில் எனில் ஏலகிரியில் ஒளி மாசு குறைவு. அதேபோல வாணியம்பாடி ஆலங்காயம் அருகே உள்ள காவலூரில் வைணு பாப்பு விண்வெளி ஆய்வகம் இருக்கிறது. இங்கும் ஒளி மாசு குறைவுதான். இந்த இடங்களிலிருந்து பார்த்தால் விண்கல் மழையை முழுமையாக ரசிக்க முடியும்" என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications