ஜெயக்குமார் கைது.. போராட்டத்தில் குதித்த அதிமுகவினர்..ட்விட்டரில் ட்ரெண்டாகும் #WeStandWithJayakumar
சென்னை : கள்ள ஓட்டு போட்டதாக திமுக தொண்டரை அரை நிர்வாணபடுத்தி தாக்கிய புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும் #WeStandWithJayakumar என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற வாக்குப் பதிவில் திமுகவினர் கள்ள ஓட்டு போட முயன்றதாக புகார் எழுந்தது.
அப்போது அங்கு இருந்த அதிமுகவினர் திமுக தொண்டரை கடுமையாக தாக்கிய நிலையில் அங்கிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அந்தத் தொண்டரின் சட்டையைக் கழற்றச் சொல்லி அரை நிர்வாணம் ஆக்கியது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

ஜெயக்குமார் கைது
இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கண்டனங்கள் தெரிவித்து இருந்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த தண்டையார்பேட்டை காவல்துறையினர் கலவரம் செய்தல், ஆபாசமாகப் பேசுதல், ஆயுதத்துடன் கொலை மிரட்டல் உள்ளிட்ட 10 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இன்று இரவு 8 மணி அளவில் வீட்டில் இருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்தனர்.

மனைவி கண்ணீர்
அவரது கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு பலரும் கூடியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டதால் போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது நடவடிக்கையை தொடர்ந்து அவரது மனைவி கண்ணீர் விட்டு அழுதார். கள்ள ஓட்டு போடுவதை தட்டிக் கேட்டது ஒரு குற்றமா , என பேசி அவர் எந்த விளக்கமும் கொடுக்காமல் தனது கணவரை அழைத்துச் சென்றதாகவும், தனக்கு மிகவும் பயமாக உள்ளது, அவரை காப்பாற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுத்த வீடியோ வெளியானது.

அதிமுக கண்டனம்
இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் , எம்எல்ஏக்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சென்னை ராயபுரம், பட்டினபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள், அதிமுக தொண்டர்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டரில் ட்ரெண்ட்
அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், பல இடங்களில் போராட்டம் வலுத்து வருகிறது. அமைச்சர் ஜெயக்குமாரை உடன விடுவிக்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும், அவரை விடுவிக்க கோரியும் ட்விட்டரில் #WeStandWithJayakumar என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. தற்போதைய நிலையில் இந்த ஹேஸ்டேக் டிவிட்டரில் இந்திய அளவில் 5வது இடத்தில் உள்ளது.












Click it and Unblock the Notifications