தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.. போலீஸ் கண்காணிப்பு தீவிரம்.. எவற்றுக்கெல்லாம் அனுமதி?
சென்னை: தமிழகத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,900-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. ஒருபக்கம் ஓமிக்ரான் பாதிப்பும் அதிகரித்து வருகிறது
இதனால் தமிழக அரசு ஊரடங்கை மீண்டும் கையில் எடுத்தது. 6-ம் தேதி முதல் தினமும் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தபடும் என்று அரசு அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

எவற்றுக்கெல்லாம் அனுமதி?
இனிமேல் தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் இரவு ஊரடங்கில் அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது அதாவது அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், ATM மையங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் (petrol, diesel & LPG) இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும். பெட்ரோல் பங்க்குகளும் செயல்படலாம்.

அரசு, தனியார் பஸ்கள் இயங்குமா?
இதேபோல் இரவு ஊரடங்கின்போது மாநிலத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் இரவு ஊரடங்கு நேரத்தில் கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதியில்லை. பொதுமக்கள் வெளியில் நடமாட முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிறுவனம், தொழிற்சாலைகளில் இரவு பணிக்கு செல்லலாம். ஆனால் இரவு பணிக்கு செல்பவர்கள் நிறுவனங்களின் அடையாள அட்டையை போலீசாரிடம் காண்பிக்க வேண்டும்

போலீசார் தீவிர கண்காணிப்பு
இரவு ஊரடங்கை மீறுபவர்களை கண்காணிக்க தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி என முக்கிய நகரங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சென்னையில் மட்டும் 312 சோதனை சாவடிகள் அமைத்து 10,000 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேவையில்லாமல் வெளியே சுற்றினால்...
இரவு ஊரடங்கின்போது தேவையில்லாமல் வெளியே சுற்றக்கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனை மீறுபவர்கள் மீது பாரபட்சமின்றி மிக மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உரிய சட்ட நடவடிக்கையுடன் அபராதம் விதிப்பதுடன், வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications