ஆளுநர் எடுத்துக்கொண்ட நேரம் போதும்.. திடீர் குரல் எழுப்பும் பாஜக தலைவர் முருகன்!
சென்னை: ஆளுநர் எடுத்துக்கொண்ட நேரம் போதும், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு உடனே ஒப்புதல் தரவேண்டும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வது நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது.
இந்த ஆண்டு மிக மோசமாக அரசு பள்ளியில் படித்த வெறும் 8 மாணவர்கள் மட்டுமே எம்பிஎஸ் படிப்பில் சேர முடியும் என்கிற நிலை உள்ளது.
பாஜகவில் இணைவது தொடர்பாக நானே அறிவிப்பேன்- நடிகை வனிதா தகவல்
எடப்பாடி பழனிசாமி
இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, சட்டசபையில் கடந்த மாதம் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றியது. இந்த மசோதாவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு 18.9.2020 அனுப்பி வைத்தது. ஆனால் இதுவரை அவர் முடிவெடுக்கவில்லை.
விரைந்து ஒப்புதல்
அதனைத் தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த 5.10.2020 அன்று உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சிவி சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் ஆளுரை கொரோனா தொற்று நிலை பற்றி விவரிக்க நேரில் சந்தித்த பொழுது நீட் உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினார்கள்.
ஆளுநர் கடிதம்
இதற்கிடையே அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு கோரி தமிழக அரசு இயற்றிய சட்டத்திற்கு இதுவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்காமல் தாமதிப்பது குறித்து எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான முக ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதினார். அவருக்கு பதில் கடிதம் அனுப்பிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்., இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக அனைத்து வகையிலும் ஆராய வேண்டியுள்ளது. இந்த விவகாரத்தில் முடிவெடுக்க 3 முதல் 4 வாரங்கள் வரை ஆகும். இதை என்னை சந்திக்க வந்த அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளேன் என்றார்.
ஸ்டாலின் சவால்
ஆளுநரின் கடிதத்தால் கொதித்த திமுக தலைவர் ஸ்டாலின், ஆளுநர், தாமதமாகும் என்று சொன்னதை அமைச்சர்கள் மறைத்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அத்துடன் ஆளுநர் விரைந்து ஒப்புதல் வழங்க கோரி போராட்டமும் நடத்தினார். முன்னதாக முதல்வருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் இந்த விவகாரத்தில் அரசியல் நாடகம் நடத்துவதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்த ஸ்டாலின், உங்களால் முடிந்தால் ஒரே நாளில் ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்து ஒப்புதல் வாங்கி காட்டுங்கள் பார்க்கலாம் என சவால் விடுத்தார்.
ஒப்புதல் தரவேண்டும்
இப்படியாக சர்ச்சைகள் எழுந்து கொண்டிருக்கிற இந்த வேளையில் பாஜக மாநில தலைவர் எல் முருகனும் 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு உடனே ஒப்புதல் தரவேண்டும் என ஆளுருக்கு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில, ஆளுநர் எடுத்துக்கொண்ட நேரம் போதும், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு உடனே ஒப்புதல் தரவேண்டும் என்றார்.