சபாஷ்.. சரியான போட்டி.. திமுக அதிமுக இடையே கடும் மோதல்!.. யுத்த களமே வேறே!
சென்னை: திமுக மற்றும் அதிமுக இடையே சமூக வலைதளங்களில் கருத்து யுத்தம் கடுமையாக நடந்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கண்ணு கருத்துமாக யுத்த களத்தில் இருவரும் இருக்கிறார்கள்.
ஒவ்வொன்ருக்கும் ஒரு எதிர்வினை உண்டு என்று சொல்வார்களே அது சமூகவலைதளங்களில் உண்மை என்பது நிஜம். கத்திமுனையை காட்டிலும் பேனா முனை வலிமையானது என் செல்வார்கள், அது மெய்பிக்கிறது 2021 சட்டசபை தேர்தல்
முன்பெல்லாம் அடிதடி, வெட்டுக்குத்து என்று தேர்தல்களம் பதற்றமாகவும் பயங்கரமாகவும் இருக்கும். கள்ளஓட்டு போடுவார்களோ என்ற பயமும், வாக்கு இயந்திரத்தை மொத்தமாக தூக்கிவிடுவார்களோ என்ற பயம் கட்சிகளிடையே மாறி மாறி இருக்கும். ஆனால் இப்போது தேர்தலில் மூளைச்சலவை செய்துவிடுவார்களோ, நம் மீது உள்ள அபிப்பிராயத்தை மாற்றிவிடுவார்களோ என்ற அச்சத்தை விதைத்து வருகின்றன கட்சிகள்.
ஸ்டாலின் மீது தாக்கு
நான் ஆரம்பத்தில் சொன்னது ஒவ்வொன்றும் எதிர்வினை உண்டு. பேசும் ஒவ்வொரு கருத்துக்கும் சமூக வலைதளங்களில் எதிர்வினைகள் பலமாக உள்ளது. ஸ்டாலின் தொடங்கி, கனிமொழி, உதயநிதி, ஆராசா வரை என திமுகவில் யாரும் விதிவிலக்கல்ல. பாரபட்சமே இல்லாமல் கடும் விம்ர்சனங்களை முன்வைத்து இவர்களுக்கு எதிராக பரப்புரையை மேற்கொள்கிறது அதிமுக மற்றும் பாஜக தரப்பு. அவர்கள் செய்யும் சிறு தவறாக இருந்தாலும் அதை மக்களிடம் கொண்டு சேர்க்க அதிமுக மற்றும் பாஜக தரப்பு இறங்கி அடிக்கிறது. இது ஒருபுறம் எனில் பாமகவும் பக்கபலமாக கடும் விமர்சனங்களை திமுகவிற்கு எதிராக வைத்து பிரச்சாரம் செய்து வருகிறது.
எடப்பாடிக்கு குறி
திமுக, இடதுசாரிகள் தரப்பும் சும்மா இல்லை. பிரதமர் மோடி , முதல்வர் எடப்பாடி பழனிசாமி , துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், மற்றும் அதிமுகவின் பல்வேறு அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்களை குறிவைத்து தாறுமாறாக விமர்சிக்கிறது. குறிப்பாக மோடியையும், எடப்பாடி பழனிசாமியையும் முன்வைத்து படுவேகமாக இறங்கி அடிக்கிறது. திமுகவைவிடவும் இடதுசாரிகள் தரப்பு, விசிக போன்றவை பாஜக வந்தால் தமிழகத்தில் இதெல்லாம் நடக்கும் என்று குறிவைத்து விமர்சனங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்கின்றன.
யுத்தமும் பலம்
என்ன சண்டை, என்ன பிரச்சனை, என்ன நடக்கிறது, எது உண்மை, எது பொய் என்பதை அறியவது ஊடகத்தில் உள்ளவர்களுக்கே கொஞ்சம் கஷ்டம் தான்,,, .அந்த அளவிற்கு சண்டைகள் இருதரப்பிலும் பலமாக உள்ளது. கத்தியில்லை. ரத்தம் இல்லை.யுத்தம் ஒன்று நடக்கிறது என்று தமிழ் கவிதை உள்ளது. அது இப்போது உண்மையாகவே நடந்து வருகிறது.
என்ன நடக்கும்
உண்மையில் கத்தியில் வரும் பயத்தைவிட சித்தாந்தத்தை நம்பவைத்து, எதிரிகளையும் நமது விசுவாசியாக மாற்றுவதே போரில் மிகப்பெரிய வெற்றியை எட்டமுடியும். அதைத்தான் இரு தரப்பும் செய்கின்றன. யார் இந்த போரில் வெல்வார்கள். யாருடைய நம்பிக்கைக்கு என்ன பலன் என்பது மே 2ம் தேதி தெரிந்துவிடும். ஆனால் ஏப்ரல் 6ம் தேதியான தேர்தல் நாளுக்குள் மக்களை தங்கள் வசப்படுத்த யுத்தத்தை இன்னும் கடுமையாக இருதரப்பும் செய்யும் என்பதே களயதார்த்தம்.