தமிழக பள்ளிகளில் பொது காலாண்டு தேர்வு கிடையாது.. வெளியான முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது என அறிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, காலாண்டு தேர்வு தேதிகளை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக, பள்ளி மற்றும் கல்லூரிகள் சரியாக இயக்கப்படாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, மாணவர்களிடம் கற்றல் இடைவெளி ஏற்படாத வண்ணம், ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. மேலும், பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, 2 திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டன. அந்த சமயத்தில், வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொரோனா பரவல் குறைந்ததையடுத்து, கோடை விடுமுறை முடிந்து, தமிழகத்தில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதியும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாத இறுதியிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டன. அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் முதல் பருவத் தேர்வுகள் கடந்த மாதம் நடத்தி முடிக்கப்பட்டன.
மாணவர்களுக்கு தொடர்ச்சியாக வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், காலாண்டு தேர்வு குறித்த விவரங்களை, பள்ளிக்கல்வித்துறை அண்மையில் அறிவித்திருந்தது. அதன்படி, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 22-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை காலாண்டுத் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு பொதுத்தேர்வைப் போலவே காலாண்டுத் தேர்வும் நடத்தப்படும் என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொது காலாண்டுத் தேர்வு கிடையாது என பள்ளிக்கல்வித்துறை திடீரென அறிவித்துள்ளது.
அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு தேதிகளில் பள்ளிகளில் காலாண்டு தேர்வை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வரும் 30-ம் தேதியுடன் காலாண்டு தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காலாண்டுத் தேர்வைப் பொருத்தவரை, பள்ளி அளவில் வினாத்தாள்களைத் தயாரித்துத் தேர்வை நடத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதிகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே முடிவுசெய்து கொள்ளலாம் எனவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications