சீட்டே கேட்காதவருக்கு சீட்டா? அதிமுகவில் நிலவும் அதிருப்தி! பஞ்சாயத்தை சமாளிக்கும் தலைமை!
சென்னை: ராஜ்யசபா சீட்டே கேட்காத ஒருவருக்கு எப்படி சீட் கொடுக்கலாம் என அதிமுக தலைமைக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலர்.
கட்சிக்காக உழைத்ததில் தாங்கள் எந்த வகையில் குறைந்துவிட்டோம் என்கிற வகையில் சீட் கிடைக்காதவர்களின் குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
இவர்களை சமாதானப்படுத்தும் பணிகளில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஈடுபட்டு வருகிறார்.

ராஜ்யசபா சீட்
தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூன் 10-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் பலத்தின் அடிப்படையில் திமுக 4 இடங்களும், அதிமுக 2 இடங்களும் கைப்பற்றக் கூடும். திமுக தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸ்க்கு ஒரு இடத்தை ஒதுக்கிவிட்டு மீதமுள்ள 3 இடங்களுக்கு கடந்த வாரமே வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.

கடிதம் தரவில்லை
ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கூட தொடங்கிவிட்ட நிலையில் அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் பட்டியல் நேற்றிரவு தான் வெளியிடப்பட்டது. அதில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தருமர் ஆகிய இருவரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் தருமர் ராஜ்யசபா சீட் வேண்டும் என எந்தக் கடிதமும் கொடுக்கவில்லை. யாரை சந்தித்தும் கேட்கவில்லை. ஆனால் அவரை வேட்பாளராக அறிவித்துள்ளது அதிமுக தலைமை.

சீட் கேட்காதவர்
இது ராஜ்யசபா சீட்டுக்காக தேனிக்கும், சென்னைக்கும், சேலத்திற்கும் அலைந்து திரிந்தவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சீட்டே கேட்காதவருக்கு சீட்டா? என தங்களின் ஆதங்கக் குரல்களை தலைமையை நோக்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளனர். இதனிடையே இவர்களை சமாதானப்படுத்தும் பணிகளில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஈடுபட்டு வருகிறார்.

வீண் வம்பு
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் வாரிசுகள் பலர் ராஜ்யசபா எம்.பி.யாகும் கனவில் இருந்தனர். இவர்களில் ஒருவருக்கு கொடுத்து இன்னொருவருக்கு கொடுக்காமல் விட்டால் வீண் வம்பு வரும் எனக் கருதியே பெரியளவில் அறிமுகமில்லாத ஒன்றியச் செயலாளர் ஒருவரை ராஜ்யசபா வேட்பாளராக அதிமுக தலைமை அறிவித்திருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications