விடாத காய்ச்சல்.. தொற்றிக்கொண்ட கொரோனா பயம்.. தாய்-தந்தை-மகள் எடுத்த விபரீத முடிவு.. கலங்கிய சென்னை
சென்னை: கொரோனா வைரஸ் வந்துவிடுமோ என்ற பயம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
இந்தியா முழுவதும் ஒன்றரை ஆண்டுகளை கடந்த பின்னரும் கொரோனா வைரஸ் மக்களை பாடாய்படுத்தி வருகிறது.
கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடிய வைரஸ் காரணமாக பலர் தங்கள் அன்புக்குரியவர்களையும், உறவினர்களையும் இழந்துள்ளனர்.

மக்களிடம் தவறான புரிதல்
கொரோனா வைரஸ் தொடர்பாக நாட்டில் ஒரு சில மக்களிடம் தவறான புரிதல் ஏற்பட்டுள்ளது. கொரோனாவை விட அதன் மீதான தேவையில்லாத பயம் மக்களை பாதித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி, தடுப்பூசி போட்டுக் கொண்டால் அதில் இருந்து எளிதில் மீண்டு விடலாம். ஆனால் ஒரு சிலர் வழக்கமான காய்ச்சல் ஏற்பட்டாலே கொரோனா வந்து விட்டது என்று பயந்து தங்களது உயிரை மாய்த்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

சோக சம்பவம்
இந்த நிலையில் லேசான காய்ச்சல் இருந்ததால் தங்களுக்கு கொரோனா வந்துவிடுமோ என்று பயந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இந்த சோக சம்பவம் பின்வருமாறு:- சென்னையை அடுத்த திருமுல்லைவாயில் சோழம்பேடு சாலை பகுதியை சேர்ந்தவர் டில்லி(74), இவரது மனைவி மல்லிகேஸ்வரி(64). இவர்களுடைய மகள் நாகேஸ்வரி(34).

குடும்ப பிரச்சினை
டில்லி முத்தா புதுப்பேட்டை அடுத்த பாலவெட்டில் விவசாயம் செய்து வந்தார். தற்போது முழு ஊரடங்கு காரணமாக வேலை எதுவும் இல்லாததால் வருமானமின்றி இருந்துள்ளார். மகள் நாகேஸ்வரிக்கு கடந்த 2013 -ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக நாகேஸ்வரி தாய் வீட்டுக்கு வந்து விட்டதாக கூறப்படுகிது.

காய்ச்சல் ஏற்படுத்திய பீதி
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நாகேஸ்வரியும், அவரது கணவரும் விவாகரத்து செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. குடும்பத்தில் வருமானம் இல்லை. மகளுக்கு இப்படி ஆகிவிட்டது என்று 3 பேரும் கடும் சோகத்தில் இருந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக மூவருக்கும் காய்ச்சல் இருந்துள்ளது. அருகில் இருந்த மருந்து கடைகளுக்கு சென்று மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டும் காய்ச்சல் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது.

3 பேரும் தற்கொலை
தொடர்ந்து காய்ச்சல் அதிகமானதால் கொரோனா வந்து விடுமோ என்று 3 பேரும் பயந்துள்ளனர். ஏற்கனவே குடும்ப பிரச்சினை வாட்டி வதைக்க கொரோனா வந்து விட்டால் நம்மால் என்ன செய்ய முடியும் என்று அவர்கள் நினைத்துள்ளனர். இதனால் விபரீத முடிவு எடுத்த டில்லி, மல்லிகேஸ்வரி, நாகேஸ்வரி ஆகிய 3 பேரும் நேற்று இரவு வீட்டின் ஹாலில் உள்ள மின்விசிறியில் தனித்தனியாக புடவையில் தூக்கு போட்டுக் தற்கொலை செய்து கொண்டனர்.

கொரோனா பயத்தால் வந்த வினை
இதுகுறித்து மல்லிகேஸ்வரியின் அண்ணன் வெங்கட்ராமன் திருமுல்லைவாயல் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருமுல்லைவாயல் போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி கே.எம்.சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொரோனா பயம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications