"சங்கராச்சாரியார்" கம்பி எண்ணி.. சீறிய முரசொலி.. "சாது கொதித்தெழுந்தால் அரசு தாங்காது" பாஜக வார்னிங்
முரசொலி தலையங்கத்திற்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது
சென்னை: முரசொலி நாளிதழில் ஆதீனங்கள் குறித்த தலையங்கத்திற்கு, தமிழக பாஜக எதிர்வினையாற்றி உள்ளது.. அத்துடன் திமுகவையும் அக்கட்சி எச்சரித்துள்ளது.
சமீபகாலமாகவே ஆதீனங்கள் பேச்சு சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.. அனைத்து பேச்சுக்களும், பேட்டிகளும் தமிழக அரசை தாக்கும் வகையிலேயே இருந்து வருகிறது..
மற்றொரு பக்கம், இந்து சமய அறநிலைத்துறையிடமிருந்து கோவில்களை மீட்டு அதை ஆதினங்கள் மற்றும் மடங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்.
Stalin is more Dangerous than Karunanithi- மதுரை ஆதீனத்துக்கு திமுகவின் முரசொலி கடும் எச்சரிக்கை!
தக்கார்கள்
அதேபோல மதுரையில் நடந்த துறவிகள் மாநாட்டில், ஆதீனங்கள் அரசியல் பேசக்கூடாது என்கிறார்களே? நாங்கள் பேசாமல் யார் பேசுவார்கள்.. கோவில்களில் அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை? கோவில்களில் அரசியல்வாதிகள் நுழைந்து விட்டனர்.. பல கோவில்களில் அரசியல்வாதிகளே தக்கார்களாக உள்ளனர் என்றும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டை முன்வைத்தார்..
எச்சரிக்கை
இவரது இந்த பேச்சுக்கு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தொடர்ந்து பொறுமையாக பதிலளித்தார். ஆனால் ஒருகட்டத்தில் எச்சரிக்க துவங்கினார்.. ஆதீனம் இப்படி அரசியல் பேசிவந்தாலோ, அவரின் இதுபோன்ற பேச்சு தொடர்ந்தால் இந்து சமய அறநிலைத்துறை அதை அனுமதிக்காது.. அவரின் இந்தப் பேச்சுக்கு பதில் சொல்ல பல வழிகள் இருக்கிறது என்று வார்னிங் தந்தார்.. ஆனாலும் ஆதீனம் அடுத்த லெவலுக்கு போய் நடிகர் விஜய்யை விமர்சித்திருந்தார்..
சின்னவாள் - பெரியவாள்
இந்நிலையில், திமுகவின் முரசொலி நாளிதழ், ஆதீனங்கள் விவகாரம் தொடர்பாக தலையங்கம் வெளியிட்டுள்ளது.. அதில், மதவெறிப் பேச்சுக்கள் குறித்தும் கண்டனம் தெரிவித்துள்ளது.. அதாவது "இந்தியாவின் குடியரசுத் தலைவர்கள் முதல் மாநில, மத்திய அமைச்சர்கள் பலரும் அந்த காஞ்சி பீடத்துக்கு விஜயம் செய்துள்ளனர். அவர் பெயரை உச்சரிக்கக் கூடமாட்டார்கள் - பெரியவாள், "சின்னவாள்" என்று பயபக்தியுடன்தான் அழைப்பார்கள்.. அந்த சங்கராச்சாரியார் தரிசனம் கிடைப்பதே பெரும் பாக்யம் என்று நாட்டிலே பலர் மணிக்கணக்கில், நாட்கணக்கில் காத்துக் கிடப்பர்!
சங்கராச்சாரியார்
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சின்னவாள், ஜெயேந்திரருக்கு என்ன கதி ஏற்பட்டது? அந்த மகாகுருவையே சிறைக்கம்பிகளை எண்ண வைத்த நிகழ்வுகள் மதுரையின் இன்றைய பீடாதிபதிக்கு நினைவிருக்கும் எனக் கருதுகிறோம்! கைது செய்து சிறைக்கூடத்துக்கு மட்டும் அனுப்பவில்லை; அதனைத் தொடர்ந்து அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் எத்தனை நிகழ்வுகள் நடந்தன என்பதை மதுரை ஆதினம் உணர்ந்திருப்பார் என்று எண்ணுகிறோம்!
பூச்சாண்டி
இவை எல்லாம் மதுரை ஆதினத்தை மிரட்ட தரும் தகவல்கள் என அவர் கருதிவிடக் கூடாது; "பிரதமர் மோடியிடம் செல்வேன்; அமித்ஷாவிடம் செல்வேன்" - என்று பூச்சாண்டி காட்டும் மதுரை ஆதினத்தின் புரிதலுக்காக இதனை நினைவூட்டுகிறோம்" என்பது உட்பட நீண்ட நெடிய கட்டுரையை முரசொலி பதிவிட்டுள்ளது.. இந்நிலையில், தமிழக பாஜகவின் திருப்பதி நாராயணன் காட்டமான ட்வீட்களை வரிசையாக பதிவிட்டுள்ளார்.. அந்த ட்வீட்கள் இவைகள்தான்:
அமித்ஷா
"இன்றைய முரசொலியின் மூலம் மதுரை ஆதீனத்தை மீண்டும் மிரட்டியுள்ளது திமுக. 'பிரதமர் மோடியிடம் செல்வேன், அமித்ஷாவிடம் செல்வேன்' என்று ஆதினம் பூச்சாண்டி காட்டுவதாக பயந்து அலறியிருக்கிறது முரசொலி. 'மதுரை ஆதினம் எல்லை மீறுகிறார், பொறுமைக்கும் எல்லை உண்டு' என்று குறிப்பிட்டு அப்பட்டமாக மிரட்டலை விடுத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திமுகவை சேர்ந்தவர்கள், மதுரை ஆதீனத்தின் சொத்துக்களை வளைக்க பார்க்கிறார்கள் என்று ஆதீனம் நேரடியாக உண்மையை உலகத்திற்கு சொன்னதால் துடிதுடித்து போயுள்ளது திமுக.
வன்முறை
பொது அமைதிக்கு ஊறு தேடுபவர்கள், கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவர்களை - அவர்கள் யாராக இருந்தாலும் வேடிக்கை பார்க்க இயலாது, சட்டம் தனது கடமையை செய்திடும் என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் ஏற்படும் நிலையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் மதவெறி பேச்சுக்கள் பேசுவதை மதுரை ஆதீனம் உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும் முரசொலி குறிப்பிட்டுள்ளது.
'யூ டூ ப்ருட்டஸ்'
'யூ டூ ப்ருட்டஸ்' என்ற யூ டியூபில் சிவபெருமானை இழிவுபடுத்திய நபரை கைது செய்ய துணிவில்லாத திமுக, மதுரையில் செஞ்சட்டை பேரணியில் கிருஷ்ண பகவானை அவதூறாக பேசி கோஷமிட்ட வன்முறை கும்பலை கைது செய்ய வக்கில்லாத திமுக, பாஜக மாநில தலைவர்அண்ணாமலையை ஒழிப்பேன் என்று பொது வெளியில் ஓலமிட்ட அமைச்சர் அன்பரசனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்ய முடியாத திமுக, அண்ணாமலையின் கைகளை வெட்டுவோம் என்று வன்முறையை தூண்டிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலைராஜன் மீது நடவடிக்கை எடுக்க முடியாத கையாலாகாத திமுக, ஹிந்து மதத்தை ஒழிப்பேன் என்று மேடை தோறும் முழங்கும் திருமாவளவனை அடக்க துணிவில்லாத திமுக, நில அபகரிப்பை செய்யும் திமுகவினரை தட்டி கேட்ட 'சாது' மதுரை ஆதீனத்தை மிரட்டி பார்ப்பது கோழைத்தனமான செயல் என்பதை உணரவேண்டும்.
ஹிந்து மதம்
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது பழைய மொழி. 'சாது கொதித்தெழுந்தால் அரசு தாங்காது' என்பது புதிய மொழி. முரசொலியின் வார்தைகளில் குறிப்பிட வேண்டுமென்றால், திமுக எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. பாஜகவின் பொறுமைக்கும் எல்லை உண்டு. ஹிந்து மத கடவுள்கள் மற்றும் நம்பிக்கைகளை அவதூறு செய்வதன் மூலம் பொதுஅமைதிக்கு ஊறு விளைவிக்கும் கயவர்களை தண்டிக்காமல் இருக்கும் திமுகவை, கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் திமுகவை, சட்டத்தை பாதுகாக்க வேண்டிய அமைச்சர்களே வன்முறையை தூண்டும் வகையில் பேசுவதை அனுமதிக்கும் திமுகவை , ஹிந்து மதத்திற்கெதிராக அவதூறு பேசும் கூட்டணி கட்சியினரை அடக்க முடியாமல் ஊழலில் ஊறி திளைக்கும் திமுகவை இனியும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது பாஜக. சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை திமுக புரிந்து கொள்ள வேண்டும்" என்று நாராயணன் பதிவிடுள்ளார்.
கொந்தளிப்பு
மேலே சொன்ன குற்றச்சாட்டுகள் அத்தனையும் நாராயணன் இதற்கு முன்பும் திமுக அரசை பார்த்து கேட்டவைதான்.. ஒவ்வொரு விவகாரம் நடந்தபோதெல்லாம் இந்த ட்வீட்களை அவர் பதிவிட்டு வந்துள்ளார்.. ஆனால், இன்று மொத்தமாக லிஸ்ட்போட்டு புட்டுபுட்டு வைத்து, திமுகவுக்கு கேள்வி எழுப்பி உள்ளது, தமிழக அரசியலில் அதிர்வலையை கிளப்பி விட்டுவருகிறது... இந்த ட்வீட்டுக்கு பலரும் திருண்டு எதிர்வினையாற்றி வருவதால், நாராயணன் ட்விட்டர் கொந்தளித்து காணப்படுகிறது..!