பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை.. வழக்கறிஞராக பணிபுரிய கமுதி வழக்கறிஞர் சங்க தலைவருக்கு தடை!
சென்னை: நீதிமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கமுதி வழக்கறிஞர் சங்கத் தலைவர் முனியசாமி வழக்கறிஞராக பணிபுரிய தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
கமுதி மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு கமுதி வழக்கறிஞர் சங்கத் தலைவர் முனியசாமி கடந்த ஏப்ரல் மாதம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக
முனியசாமிக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

பெண் ஊழியரின் கோரிக்கையை ஏற்று, அவர் வேறு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். வேறு நீதிமன்றத்துக்கு சென்று விட்டதால் முனியசாமி மீதான நடவடிக்கையை தொடர வேண்டாம் என்று அந்த பெண் கேட்டுக் கொண்டார். இதனால் முனியசாமி மீதான நடவடிக்கை நிறுத்தப்பட்டது. இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி வழக்கறிஞர் ராமநாதன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், பாதிக்கப்பட்ட பெண் நடவடிக்கையை தொடர வேண்டாம் என்றாலும் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது. இந்திய தண்டனை சட்டம், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் என்று தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி, புகாரில் வழக்கறிஞர் முனியசாமி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி தமிழ்நாடு கவுன்சிலுக்கு பரிந்துரைக்க உத்தரவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் ஒழுங்கு நடவடிக்கை விசாரணை முடியும்வரை வழக்கறிஞர் முனியசாமி வழக்கறிஞராக தொழில்புரிய தடை விதித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அனைத்து நீதிமன்றங்களிலும், தீர்ப்பாயங்களிலும் ஆஜராக அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications