எதிர்கட்சி துணைத்தலைவர் யார்..நேரில் முறையிட்ட இபிஎஸ்..சபாநாயகர் அப்பாவு வைத்த சஸ்பென்ஸ்
சென்னை: சட்டசபையில் எதிர்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து முறையிட்டனர். எதிர்கட்சி துணைத்தலைவர் யார் என்று சட்டசபையில் அறிவிப்பதாக கூறியுள்ளார் சபாநாயகர் அப்பாவு.
தமிழக சட்டசபையில் எப்போதுமே ஆளும்கட்சி, எதிர்கட்சி இடையேயான விவாதங்களில்தான் அனல் பறக்கும். ஆனால் பிரதான எதிர்கட்சியான அதிமுகவே ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் என இரண்டாக பிளவு பட்டு கிடப்பதால் சட்டசபைக்குள் அனல் காற்று வேறு திசையில் வீசுகிறது.
எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம் அருகே அமருவதுதான் இப்போதைய பிரச்சினை. அதற்கான காரணமே அதிமுகவில் நடைபெறும் உள்கட்சி பூசல்தான்.

இடைக்கால பொதுச்செயலாளர்
ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ்ஸை அதிமுகவிலிருந்து பொருளாளர், அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கினார். அதேபோல, மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் ஆகிய எம்.எல்.ஏக்களும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர். தொடர்ந்து எம்.பி ரவீந்திரநாத் உள்ளிட்ட பலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

ஓ.பன்னீர் செல்வத்திற்கு செக்
ஓபிஎஸ் வகித்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை பறிக்கவும் சபாநாயகருக்கு கடிதம் கொடுத்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 3 எம்.எல்.ஏக்களின் சீட்களையும் மாற்ற வேண்டும் என்றும் சபாநாயகருக்கு கடிதம் அளித்தார் எடப்பாடி பழனிச்சாமி.

ஆர்.பி உதயகுமார்
சட்டசபையில் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓ பன்னீர்செல்வத்தை அமர வைக்க கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகர் அப்பாவுவிற்கு கடிதம் எழுதியது. ஆர்பி உதயகுமார்தான் அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர். அதனால் அவரைத்தான் அந்த இருக்கையில் அமர வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இருக்கை விவகாரம்
நான்தான் எதிர்க்கட்சி துணை தலைவர். அதனால் நான்தான் அந்த இடத்தில் தொடர வேண்டும் என்று சபாநாயகரிடம் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார். ஆனால் தமிழக சட்டசபையில் இன்று இருக்கைகள் மாற்றம் செய்யப்படவில்லை. எதிர்க்கட்சி தலைவர் இருக்கை எடப்பாடி பழனிசாமிக்கு, எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை ஓ பன்னீர்செல்வத்திற்கும் அளிக்கப்பட்டு இருந்தது. ஆர்பி உதயகுமாருக்கு அந்த இருக்கை அளிக்கப்படவில்லை.

ஆறு கடிதங்கள்
சட்டசபையின் முதல்நாள் கூட்டத்திற்கு எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 62 பேரும் வரவில்லை. ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி இருக்கிறார். ஒரு கடிதம் இல்லை.. இரண்டு கடிதம் இல்லை.. மூன்று கடிதம் இல்லை.. மொத்தமாக 6 கடிதம் கொடுத்து இருக்கிறார். இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் 2 கடிதம் கொடுத்து இருக்கிறார் என்று கூறியுள்ளார் சபாநாயகர் அப்பாவு.

எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்திப்பு
பரபரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று இரண்டாவது நாளாக கூடுகிறது. இந்த நிலையில் எதிர்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சபாநாயகர் அப்பாவு அவர்களை எடப்பாடி பழனிச்சாமியும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.

சட்டசபையில் அறிவிப்பேன்
இதனிடையே தன்னை நேரில் சந்தித்து வலியுறுத்திய எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களிடம், எதிர்கட்சித்துணைத்தலைவர் யார் என்பதை சட்டசபையில் அறிவிப்பேன் என்று கூறியுள்ளார். அவரது சஸ்பென்ஸ் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினை மட்டுமல்லாது ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரிடையேயும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications