மகாமகம் விபத்து...ஜெ., பேரை சொன்ன செல்வப்பெருந்தகை... அதிமுக தர்ணா - குண்டுக்கட்டாக வெளியேற்றம்
சட்டசபையில் ஜெயலலிதாவின் பெயரை செல்வப்பெருந்தகை கூறியதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: தஞ்சாவூர் களிமேடு விபத்து அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. திருவிழாவின் போது முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றவில்லை எனக் கூறி சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அவைக்கு வந்து பேச வாய்ப்பு கேட்டு தர்ணாவில் ஈடுபட்ட அதிமுகவினரை குண்டுக்கட்டாக வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
சட்டசபையில் தஞ்சை தேர் விபத்து குறித்து அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானத்தில், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும் என அதிமுக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தஞ்சை மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என எடப்பாடிபழனிச்சாமி குற்றம் சாட்டினார்.
தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு தேர் திருவிழாவில் மின் விபத்து ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தது குறித்து சட்டசபையில் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது, திருவிழாவின் போது முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றவில்லை எனக் கூறி சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, தஞ்சாவூர் தேர் திருவிழாவின் போது உயரழுத்த மின்சார கம்பியில் உரசியதால் 11 பேர் உயிரிழந்தனர், 15 பேர் காயமடைந்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் நிவாரணங்களை உயர்த்தி தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என கூறியுள்ளேன்.
தேர் இழுக்கும்போது உயரழுத்த மின்சாரங்கள் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், சாலைகள் சீரமைக்கப்பட வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் விபத்து ஏற்பட்டுள்ளது. தேர் விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சித்திரை திருவிழா விபத்து
இதேபோல், மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின்போதும் அரசு முறையான பாதுகாப்பு செய்யாததால் கூட்ட நெரிசலில் 2 பேர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றார். திருவிழா காலங்களில் இந்த அரசு முழுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல், பாதுகாப்பு அளிக்க தவறுவதால், தஞ்சாவூரில் 11 உயிர்களை இழந்துள்ளோம்.

சரியான திட்டமிடல் இல்லை
தேர் திருவிழாவின் மின் விபத்துக்கு அரசு சரியான திட்டமிடல் செய்யாததே காரணம். இதனை கண்டித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம். அதிமுக ஆட்சியில் அத்திவரதர் தரிசனத்தின்போது எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாமல் பக்தர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்பட்டது என்றார்.

ஜெயலலிதா பெயரை சொன்ன செல்வப்பெருந்தகை
அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த பின்னர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செல்வப்பெருந்தகை பேசினார். கடந்த 1992ஆம் ஆண்டு கும்பகோணத்தில் நிகழ்ந்த மகாமகம் திருவிழாவில் நிகழ்ந்த விபத்து பற்றி பேசினார். அப்போது அவர் ஜெயலலிதாவின் பெயரை கூறியதாக தெரிகிறது.

கூச்சல் குழப்பம்
இதனைத் தொடர்ந்து சட்டசபைக்குள் மீண்டும் அதிமுக உறுப்பினர்கள் சென்றனர். சட்டசபையில் மீண்டும் பேச அனுமதி கோரினர். அவைக்குள்ளேயே அமர்ந்து முழக்கம் எழுப்பியதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்தியதால் அவர்களை குண்டுக்கட்டாக வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

ஜெயலலிதா பெயரை சொன்னது ஏன்?
அவைக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி அவைக் காவலர்கள் மூலம் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து சட்டசபையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரைக் கூறியதாக குற்றம் சாட்டினார். துயரமான சம்பவம் நடைபெற்றிருக்கக் கூடிய இந்த சூழ்நிலையில் தேவையில்லாத ஒரு கருத்தை செல்வப்பெருந்தகை பதிவு செய்துள்ளார்.

கும்பகோணம் விபத்து
கும்பகோணம் மகாமகம் விபத்து குறித்து பேசியது கண்டிக்கத் தக்கது என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமி, இது திமுகவின் தூண்டுதல் காரணமாகவே பேசியுள்ளார். ஒவ்வொரு முறை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரும் போதும் அதிமுகவை குறை சொல்லித்தான் செல்வப்பெருந்தகை பேசுவதாகவும் குற்றம் சாட்டினார் எடப்பாடி பழனிச்சாமி. செல்வப்பெருந்தைகை பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டார்.

உயிரோடு இல்லாதவரைப் பற்றி பேசலாமா?
1992ஆம் ஆண்டு நடந்த சம்பவத்திற்கும் இப்போது நடந்துள்ள விபத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இப்போது உயிருடனும் இல்லை. அப்படி இருக்கும் போது திமுகவின் தூண்டுதலின் பேரில் செல்வப்பெருந்தகை பேசி அதனை அவைக்குறிப்பேட்டில் பதிவேற்றியிருக்கிறார். அதை நீக்க கோரிக்கை வைத்தோம் அதை நிராகரித்து விட்டனர் என்றார்.












Click it and Unblock the Notifications