பாஜக நடவடிக்கை எடுத்தால் எடுக்கட்டும்.. ஸ்டாலினை வாழ்த்தியதற்கு பின் பிளான் இருக்கிறதா?.. அரசகுமார்!
ஸ்டாலினை வாழ்த்தியதற்காக பாஜக என் மீது நடவடிக்கை எடுத்தால் எடுக்கட்டும், பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் அரசக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் உடன் எனக்கு நல்ல நட்பு இருக்கிறது, ஸ்டாலினை வாழ்த்தியதற்காக பாஜக என் மீது நடவடிக்கை எடுத்தால் எடுக்கட்டும், பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் அரசக்குமார் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின், பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் அரசக்குமார் மற்றும் பல கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் அரசக்குமார், கூவத்தூர் சம்பவத்தின்போதே முதல்வராகியிருக்க முடியும், அவர் அப்போது அப்படி எல்லாம் செய்யவில்லை. அவர் விதிகளுக்கு முரணாக செயல்படவில்லை. அவர் கடைசி வரை ஜனநாயகத்திற்காக அமைதியாக இருந்தார்.
கடும் எதிர்ப்பு
தமிழக முதல்வராக ஸ்டாலின் விரைவில் பொறுப்பேற்பார். காலம் வரும் கட்டாயம் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார். தமிழகம் விரைவில் திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வராக பார்க்கும் என்று குறிப்பிட்டார். அவரின் இந்த பேச்சு தமிழக அரசியலில் நிறைய குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவின் பலர் இவரின் பேச்சுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.
புதுக்கோட்டை எப்படி
இது தொடர்பாக தற்போது பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் அரசக்குமார் விளக்கம் அளித்துள்ளார். அதில், புதுக்கோட்டையில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசுவின் இல்ல திருமண விழாவில் நான் கலந்து கொண்டேன். திமுக தலைவர் ஸ்டாலின் அந்த விழாவிற்கு தலைமை தாங்கினார். நானும் அதில் கலந்து கொண்டேன். ஸ்டாலின் அதில் பேசினார். நானும் பேசினேன்.
பிளான் இல்லை
நான் பேசும் போது மிகவும் எதார்த்தமாக பேசினேன். நான் எதையும் பிளான் செய்து பேசவில்லை. ஜனநாயக ரீதியில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று நினைக்கிறார். அதனால் ஜனநாயக ரீதியாக அவரின் பயணம் வெற்றிபெற வேண்டும்.
வாழ்த்து
அவரின் கனவு நிறைவேற வேண்டும் என்று மரியாதையாக வாழ்த்தினேன். ஆனால் அவர்தான் அடுத்த முதல்வராக போகிறார் என்று நான் எங்குமே சொல்லவில்லை. அதிலும் அது என்னுடைய தனிப்பட்ட உணர்வு. இது பாஜகவின் குரல் கிடையாது. பாஜகவின் அறிக்கை கிடையாது.
நடவடிக்கை
திமுக தலைவர் ஸ்டாலின் உடன் எனக்கு நல்ல நட்பு இருக்கிறது. அவர் என்னை எங்கு பார்த்தாலும் நலம் விசாரிப்பார். ஸ்டாலினை வாழ்த்தியதற்காக பாஜக என் மீது நடவடிக்கை எடுத்தால் எடுக்கட்டும். அதை நான் ஏற்க தயார் என்று அரசகுமார் தனது பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.