ஃபைல்களை மட்டும் பார்த்தது அந்த காலம்! ஃபீல்டை பார்ப்பது இந்த காலம்! இறையன்பு அதிரடி!.. வீடியோ வைரல்
சென்னை: இதுவரை இல்லாத அளவுக்கு தமிழக தலைமைச் செயலாளராக உள்ள வெ இறையன்பு சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்.
Recommended Video
திமுக ஆட்சி அமைந்தவுடன் நிர்வாக அதிகாரிகளின் மாற்றத்தில் அரசு கவனமாக செயல்பட்டது. கடந்த ஆட்சியில் ஓரங்கட்டப்பட்ட நேர்மையான அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் அளித்து முதன்மை பணிகளையும் அரசு அளித்தது.
அந்த வகையில் திமுகவின் அதிரடி மாற்றங்களில் முக்கியமானவர் தலைமைச் செயலாளர். சிறந்த எழுத்தாளர், நேர்மையான கரங்களுக்கு சொந்தகாரர், ஏழை மக்களின் நண்பன், ஏழைகளுக்காகவே சேவை செய்யும் சிறந்த அதிகாரி ஆகிய பன்முகங்களை கொண்ட இறையன்பு அந்த அரசின் தலைமை பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டார்.

அதிகாரிகள்
இவர் நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து அதிகாரிகளுடன் எப்போதும் தொடர்பில் இருந்து வருகிறார். இவரை திருப்திப்படுத்த இவர் எழுதிய புத்தகங்களை வாங்குமாறு பள்ளிகளை வற்புறுத்தக் கூடாது என முதல் அறிவிப்பை வெளியிட்டு அதிரடி கிளப்பினார். இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய சென்ற போது தனக்கு எளிய உணவுகளே போதும் ஆடம்பர உணவுகள் வேண்டாம் என அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கு சுற்றறிக்கை விடுத்தார்.

சாலைகளின் தரம்
இதற்கு அடுத்து, சாலை பணிகளை மேற்கொள்வதற்கு முன்னர் சாலைகளின் தரத்தை ஆய்வு செய்து கொள்ளுமாறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டார். தரமற்ற சாலையின் மீதே புதிய சாலை போடுவதால் எந்த பயனும் இல்லை என்பதால் அதை பெயர்த்துவிட்டு மேடு பள்ளத்திற்கேற்ப மழை நீர் எந்த குடியிருப்புக்குள்ளும் புகாதபடி போடுமாறு உத்தரவிட்டார்.

இளைஞர்கள்
அண்மையிலும் இவர் வெளியிட்ட சுற்றறிக்கை இளைஞர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதாவது "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" என்ற பிரிவிற்கு மனுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. எனவே மக்களின் குறைகளை மாவட்ட அளவில் தீர்க்குமாறும் அவர்கள் தலைமைச் செயலகத்தின் கதவுகளை தட்டாதபடி அனைவரும் பொறுப்போடு பணியாற்றுமாறும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அன்பு உத்தரவு பிறப்பித்தார்.

இறையன்பு களம்
இப்படி அதிரடிகளை காட்டி வரும் இறையன்பு களத்தில் இறங்கி பணியாற்றியும் வருகிறார். வடகிழக்கு பருவமழை காலம் அடுத்த மாதம் தொடங்கும் என்பதால் சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெறுகின்றன. அந்த பணிகளை இறையன்பு நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.

இணையத்தில் வைரல்
இது குறித்து ஒரு வீடியோவை சென்னை மாநகராட்சி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அவர் மழை நீர் தூர்வாரும் பணிகளை எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடிக்கும் அவருடன் இருக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தலைமைச் செயலாளர்கள்
முன்னாள் தலைமைச் செயலாளர்களில் சிலர் தலைமைச் செயலகத்தில் கோப்புகளை ஆய்வு செய்வது, கையெழுத்திடுவது, பார்வையிடுவது என்றுதான் இருந்தார்கள். ஆனால் இறையன்போ தனக்கான அதிகாரம் என்ன என்பதை சரி வர தெரிந்து கொண்டு ஃபைல்களையும் பார்க்கிறார், ஃபீல்டையும் பார்க்கிறார்! அது போல் சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடியின் நியமனமும் அனைவரது வரவேற்பை பெற்றது.












Click it and Unblock the Notifications