தமிழகத்தில் ஆன்லைன் தேர்வுகள் இல்லை- கல்லூரிகளில் இனி நேரடி செமஸ்டர் தேர்வுகள்தான்...உயர்கல்வித்துறை
சென்னை: தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் இனி நேரடி செமஸ்டர் தேர்வுகள் மட்டுமே நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா லாக்டவுன் காலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டன. தற்போது வகுப்புகள் திறக்கப்பட்டு கல்லூரிகளுக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் திடீரென செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என கல்வித்துறை தெரிவித்தது. இதற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஆன்லைனில் பாடம் நடத்தினால் ஆன்லைனில் தேர்வுகள் நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

மதுரை மாணவர்கள் போராட்டம்
மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அதாவது கொரோனா லாக்டவுன் காலத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்திவிட்டு ஆஃப் லைனில் - நேரடியாக செமஸ்டர் தேர்வு நடத்துவதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் செமஸ்டர் தேர்வுகள் 2 வார காலத்துக்கு ஒத்திவைக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.

புதுக்கோட்டையிலும் போராட்டம்
இதேபோல் புதுக்கோட்டையில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆன்லைனில் வகுப்புகளை நடத்தியதால் ஆன்லைன் தேர்வுகளை நடத்துக- நேரடி முறையில் செமஸ்டர் தேர்வை நடத்த கூடாது என மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் தொடர்ந்து பரபரப்பு நிலவி வந்தது.

உயர்கல்வித்துறை விளக்கம்
இதனைத் தொடர்ந்து தற்போது தமிழக அரசின் உயர்கல்வித்துறை தற்போது ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. அதில் இனி கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ஆஃப்லைன் மூலம் மட்டுமே நடைபெறும்; ஆன்லைனில் நடத்தப்படாது என கூறப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் அனைத்து வகை கல்லூரிகளிலும் இனி நேரடியாக மட்டுமே செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்பது உயர்கல்வித்துறையின் அறிக்கை.

இனி நேரடி செமஸ்டர் தேர்வுகள்தான்
மேலும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் ஆஃப்லைன் தேர்வுகள் நடத்தப்படும்; கொரோனா கால விதிமுறைகளைப் பின்பற்றி இந்த நேரடி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்றும் உயர்கல்வித்துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications