சென்னையில் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை பெயரை திடீரென மாற்றிய தமிழக அரசு- ஸ்டாலின், வீரமணி கண்டனம்
சென்னை: சென்னையில் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை பெயரை திடீரென தமிழக அரசு மாற்றி இருப்பது கடும் சர்ச்சையாகி உள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
தமிழக அரசின் நெடுஞ்சாலை துறையானது சென்னை பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையை (பூந்தமல்லி நெடுஞ்சாலை) Grand Western Trunk Road என திடீரென மாற்றி உள்ளது. தமிழக அரசின் மாநில நெடுஞ்சாலை துறை இணையத்திலும் கூட பெரியார் ஈ.வே.ரா நெடுஞ்சாலை என்பதற்கு பதிலாக Grand western trunk road என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை திகழ்கிறது. இதை ஏன் தமிழக அரசு மாற்றியது என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.
வீரமணி கண்டனம்
இந்த நிலையில் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை பெயரை கைவிட்டதற்காக தமிழக அரசுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். கி. வீரமணி வெளியிட்டுள்ள கண்டனம்:
எம்ஜிஆர் வைத்த பெயர்
தந்தை பெரியார் அவர்களது நூற்றாண்டு விழாவை ஓராண்டு விழாவாக - தொடர் விழாவாக நடத்திய எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்த அ.தி.மு.க. அரசு 1979 இல் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை என்ற பெயரை "பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை" என்று பெயர் மாற்ற மக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., அவ்வாறு மாற்ற அரசு ஆணை பிறப்பித்தார்.
ஏன் திடீர் மாற்றம்?
அதனை இப்போதைய எடப்பாடி பழனிசாமி அரசு - Grand Western Trunk Road என்று பெயர் மாற்றம் செய்தது ஏன்? யாரைத் திருப்தி செய்ய? என்ன பின்னணி - விஷமத்திற்கு யார் காரணம்? யார் பொறுப்பு? அதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
கிளர்ச்சி ஏற்படும்
உடனடியாக அதை இணைய தளத்தில் இருந்து நீக்கி, ''பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை'' என்று மாற்றாவிட்டால் கடுங்கிளர்ச்சி வெடிப்பது உறுதி! உறுதி!! இவ்வாறு வீரமணி தெரிவித்துள்ளார்.
|
திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
இதேபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில், ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலையை Grand Western Trunk Road என மாற்றிட காபந்து அரசுக்கு எங்கிருந்து உத்தரவு வந்தது? எஜனாமனர்கள் கால்பிடிக்கும் வேலையா? தந்தை பெரியார் பெயர் கேட்டாலே நடுங்கும் மதவெறி சக்திகளின் ஆட்டமா? உடனடியாக மாற்றிடுக! தாமதித்தால் மே.2-க்குப் பிறகு ஆணை வெளியாகும்! என எச்சரித்துள்ளார். மேலும் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.