வரிசைகட்டப் போகும் ஊழல் வழக்குகள்- முதலில் எம்.ஆர். விஜபாஸ்கர்- கிலியில் மாஜி அதிமுக அமைச்சர்கள்
சென்னை: சட்டசபை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்கள் மீதான நடவடிக்கையை திமுக அரசு தொடங்கி இருக்கிறது. முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பலரும் பீதியில் உள்ளனர்.
Recommended Video
முந்தைய அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் செய்த ஊழல் முறைகேடுகள் விவரங்களை பல நூறு பக்க விரிவான ஆதாரங்களுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் திமுக வழங்கியது. ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது திமுக. ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.
சட்டசபை தேர்தலில் திமுகவின் வாக்குறுதிகளில் முக்கியமானதாகவும் இருந்தது ஊழல் செய்த அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்பது. திமுக ஆட்சி அமைந்தது முதலே இந்த நடவடிக்கை எப்போது பாயும் என்பது பேசுபொருளாக இருந்தது.
மாஜி அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் ஐ.டி. ரெய்டு.. முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்
பாலியல் வழக்கில் மணிகண்டன்
இதனால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலர், பல்வேறு வழிகளில் திமுக அரசுடன் சமாதானப் பேச்சுகளை நடத்தியதாகவும் கூறப்பட்டது. அதேநேரத்தில் முதல் விக்கெட்டாக பாலியல் வழக்கில் மாஜி அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இப்போது ஊழல் செய்த மாஜி அமைச்சர்கள் மீதான நடவடிக்கைகள் பாயத் தொடங்கி உள்ளன.
ஊழல் வழக்கில் சிக்கிய விஜயபாஸ்கர்
முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து கரூரில் உள்ள விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
உயர்நீதிமன்றம் உத்தரவு
ஏற்கனவே போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு 8 நிறுவனங்களிடம் மட்டும் ஜிபிஎஸ் கருவி வழங்க வேண்டும் என்ற அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் அது ஏன் 118 நிறுவனங்கள் இருக்கும் போது குறிப்பிட்ட 8 நிறுவனங்களிடம் மட்டும் ஜிபிஎஸ் கருவிகள் வாங்க வேண்டும் என கேட்டு சென்னை உயர்நீதிமன்றம் அந்த உத்தரவுக்கு தடை விதித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதேபோல் ஒரு குறிப்பிட்ட நிறுவனங்களிடம் மட்டும் ஒளிரும் பட்டைகளையும் வாங்க போக்குவரத்துறையினருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கும் சென்னை உயர்நீதிமன்றமே தடைவிதித்திருந்தது.
அச்சத்தில் மாஜி அமைச்சர்கள்
இந்த முறைகேடு விவகாரங்களை திமுகவும் அதன் மூத்த தலைவர்களும் அறிக்கைகளுக்கு மேல் அறிக்கைகளில் அப்போது விவரித்திருந்தனர். இந்த நிலையில்தான் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளது. திமுக அரசின் இந்த நடவடிக்கையானது ஊழல் புகார்களில் சிக்கிய பல மாஜி அமைச்சர்களுக்கு பீதியை கொடுத்துள்ளது. அடுத்தடுத்து சிக்கப் போகும் மாஜி அதிமுக அமைச்சர்கள் யாராக இருக்கும்? என்ன மாதிரியான வழக்குகளை திமுக அரசு போட வாய்ப்புள்ளது? என்பது இப்போதைய அரசியல் களத்தின் விவாதம்.