சென்னைக்கு முக்கிய அலர்ட்.. 'இவர்களால் கொரோனா பரவல் அதிகமாகலாம்'.. அமைச்சர் மா.சு பேட்டி
சென்னை: பொங்கல் முடிந்து திரும்புபவர்களால் சென்னையில் கொரோனா சற்று அதிகரிக்கலாம் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு அனைவரும் விரைவாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஓமிக்ரான் வைரஸ் புகுந்ததில் இருந்து தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 23,989 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட்டது. ஆக்டிவ் கேஸ்களும் உச்சத்தில் உள்ளது.
பொறுமையா இருங்க மக்களே..! போக போக தானா தெரியும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
அடங்காமல் திரியும் கொரோனா
அடங்காமல் திரியும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த 6-ம் தேதி முதல் தினமும் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கை அமல்படுத்தி இருக்கிறது. ஆனாலும் தொற்று அதிகமாகிறதே தவிர குறையவில்லை. பொங்கல் பண்டிகைகாக கிட்டத்தட்ட ஒரு வாரம் தமிழகத்தில் விடுமுறை அளிக்கப்பட்டது.
சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்
பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக பாதி சென்னை மக்களே சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். தற்போது விடுமுறை முடிந்து சென்னை திரும்ப தொடங்கி இருக்கிறார்கள். இப்படி மக்கள் மொத்தமாக நகர்வதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கலாம் என்று ஏற்கனவே பல்வேறு தரப்பினரும் கூறினார்கள். தற்போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் இதையே கூறியுள்ளார்.
சென்னைக்கு அலர்ட்
பொங்கல் விடுமுறை முடிந்து பொதுமக்கள் ஏராளமானோர் திரும்பி கொண்டிருக்கிறார்கள். இந்த ஒன்று கூடுதலால் அடுத்த ஒரிரு நாட்கள் தொற்று சற்று அதிகரிக்கலாம் என்று அவர் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியுள்ளார். இருப்பினும் கொரோனா தொற்று விரைவில் கட்டுக்குள் வரும் என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார்.
ஆனலும் இதில் ஆறுதல்
தொற்று எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் உயிரிழப்பு மிகவும் குறைவாக இருப்பது ஆறுதலாக உள்ளது என்று கூறிய மா.சுப்பிரமணியன் தமிழக அரசு எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சுமார் 5,800 படுக்கைகள் தயாராக உள்ளதாகவும், தமிழகம் முழுவதும் உள்ள 1 லட்சத்து 91 ஆயிரம் படுக்கைகளில் 8 ஆயிரம் படுக்கைகள் மட்டுமே நிரம்பி உள்ளன என்றும் அவர் கூறினார்.
தடுப்பூசி முக்கியம் மக்களே
60 வயதை கடந்தவர்களில் 90 லட்சம் பேர் இன்னும் 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்று வேதனையுடன் தெரிவித்த அமைச்சர் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு அனைவரும் தடுப்பூசியை விரைவாக போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.