இக்கட்டான நிலை.. அனுப்புறது கஷ்டம்.. உடனே போனை போட்ட "தங்கம்".. தமிழக அரசுக்கு வந்த SOS மெசேஜ்!
சென்னை: தமிழகத்தின் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்கும், தினசரி ஆக்சிஜன் வரத்தை பூர்த்தி செய்வதற்கும் தமிழக அரசு முக்கியமான சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் நேற்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எடுத்த இரண்டு முக்கியமான முடிவுகள் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க அதிகரிக்க ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது. ஆனால் புதிதாக உருவாக்கப்பட்ட ஆக்சிஜன் பெட் கொண்ட சிகிச்சை மையங்கள், அதேபோல் வேறு மாநிலங்களில் இருந்து வாங்கப்படும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் காரணமாக தமிழகத்தின் ஆக்சிஜன் தேவை தொடர்ந்து பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
500 மெட்ரிக் டன் வரை தமிழகத்திற்கு தினசரி ஆக்சிஜன் தேவை இருக்கும் போது, எல்லா நாள் இரவும் தேவையான ஆக்சிஜன் மருத்துவமனைகளுக்கு வந்துவிடுகிறது.
முள் மேல்
கிட்டத்தட்ட முள் மேல் நடப்பது போலத்தான் தினமும் ஆக்சிஜன் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதில் சரியான திட்டமிடல் இருப்பதால் இதுவரை எந்த விதமான சொதப்பலும் நடக்கவில்லை. ஒருவேளை வார் ரூம் மட்டும் உருவாக்கப்படாமல் போய் இருந்தால் பல மருத்துவமனைகளில் பெரிய அசம்பாவிதங்கள் நேர்ந்து இருக்கும். ஆனால் தமிழக அரசு முறையாக திட்டமிட்டு மாவட்டங்களுக்கு ஆக்சிஜனை வழங்கி வருகிறது.
எப்படி
முக்கியமாக தமிழகத்திற்கு ஒடிசாவில் இருந்தும் ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. தினமும் 146 டன் ஆக்சிஜன் ஒடிசாவில் இருந்து வந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தின் ஆக்சிஜன் தேவையை ஒடிசா கொடுக்கும் ஆக்சிஜன் பெரிய அளவில் பூர்த்தி செய்கிறது. ஆனால் இந்த ஆக்சிஜன் வரத்து அடுத்த 2 -3 நாட்களுக்கு தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது.
தடை
ஒடிசாவில் யாஸ் புயல் தாக்க உள்ளது. ஒடிசாவிற்கு நெருக்கமாக செல்லும் யாஸ் புயல் அங்கு கடும் சேதத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆக்சிஜன் உற்பத்தியிலும், அதை தமிழகம் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மின்சார தடை ஏற்படும் என்பதால் ஆக்சிஜன் உற்பத்தியில் பெரிய அளவில் பாதிப்பும், தடங்கலும் ஏற்படும்.
அறிவிப்பு
இதனால் தமிழகத்திற்கு ஆக்சிஜன் கொடுப்பதில் சிக்கல் ஏற்படலாம், சூழ்நிலை சரியில்லை என்று ஒடிசா அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆக்சிஜன் ஏற்பாடு செய்வதில் பணிகளை கவனித்து வரும் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு துரிதமாக களத்தில் இறங்கி முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளார். ஒடிசா மாநிலம் புயலை சந்திப்பதால் ஆக்சிஜன் ஆலைகள் பாதிப்பை சந்திக்கும் என்று முன்னரே யோசித்து, மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு ஆக்சிஜன் எஸ்ஓஎஸ் மெசேஜ்களை அனுப்பி உள்ளார்.
முடிவு
உங்கள் மாநிலங்களிலிருந்த ஆக்சிஜன் துரிதமாக வேண்டும் என்று கேட்டுள்ளார். ஒடிசா ஆக்சிஜன் வழங்க முடியாத நாட்களில் இந்த இரண்டு மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு ஆக்சிஜன் வருவதற்கான ஏற்பாடுகளை தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்துள்ளார். அங்கு ஆட்சியில் இருக்கும் தனக்கு நெருக்கமான அரசியல் தலைவர்களுக்கு போன் செய்து துரிதமாக இந்த ஏற்பாட்டை தங்கம் தென்னரசு செய்து இருக்கிறார்.
வருகிறது
இதனால் ஒடிசாவில் இருந்து ஆக்சிஜன் வராமல் போனால் தமிழகத்திற்கு மகாராஷ்டிரா, பஞ்சாப் மூலம் ஆக்சிஜன் வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தயார் நிலையில் உள்ளன. புயல் காரணமாக பிரச்சனை வரலாம் என்று முன்கூட்டியே யோசித்து, தங்கம் தென்னரசு வேகமாக செயல்பட்டு ஆக்சிஜன் ஏற்பாட்டை செய்துள்ளார். இது மட்டுமின்றி, மாநில அரசுகளை மட்டும் நம்பி இருக்காமல் வெளிநாடுகளில் இருந்தும் ஆக்சிஜன் வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகள்
தைவானிலிருந்து 20 மெட்ரிக் டன் கொள்ளளவு ஆக்சிஜன் தமிழகம் வருகிறது. 4 கிரையோஜெனிக் கன்டெய்னர்களில் திரவ ஆக்சிஜன் நாளை அல்லது நாளை மறுநாள் வர உள்ளது. இதை தொடர்ந்து இன்னும் பல மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு ஆக்சிஜன் வர தங்கம் தென்னரசு மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.