தமிழகம் தாழ்ந்த நிலைக்கு செல்கிறது... கற்பனை அறிவிப்புகளை முதல்வர் நிறுத்த வேண்டும் -கே.எஸ்.அழகிரி
சென்னை: தமிழகம் தாழ்ந்த நிலைக்கு சென்று கொண்டிருப்பதை உணர்ந்து கற்பனை அறிவிப்புகளை முதலமைச்சர் கைவிட வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி குன்றியிருப்பதை மத்திய அரசின் தரைவரிசைப் பட்டியல் அம்பலப்படுத்தி உள்ளதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்;

உகந்த மாநிலங்கள்
இந்தியாவில் எளிதாக தொழில் நடத்துவதற்கு உகந்த மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரா முதல் இடம் வகிக்கிறது. தமிழகம் பதினான்காவது இடத்தில் உள்ளது. ஆந்திர மாநிலம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. இந்த தரவரிசை பட்டியலை டெல்லியில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது தொழில் வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

முதல் 10 இடங்கள்
மத்திய அரசின் தரவரிசை பட்டியலை பொறுத்தவரை 2018 ஆம் ஆண்டு பனிரெண்டாவது இடத்தில் இருந்த உத்திரபிரதேச மாநிலம் இரண்டாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது. முதல் பத்து மாநிலங்களில் கூட இடம்பெற முடியாமல் தமிழகம் பதினான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது பல்வேறு நிலைகளில் முதலீடுகளை பாதிப்பதற்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த பட்டியலை பார்க்கிறபோது முதலீடு செய்பவர்கள் ஆந்திர மாநிலத்திற்கு செல்வார்களேயொழிய தமிழகத்திற்கு வரமாட்டார்கள்.

அறிவிப்பு வேறு
தமிழக முதலமைச்சர் அறிவித்திருக்கிற முதலீட்டு தொகைக்கும், வேலை வாய்ப்பு எண்ணிக்கைக்கும் என்ன அடிப்படை ஆதாரம் என்று எவராலும் தெரிந்துகொள்ள முடியவில்லை. அறிவிப்புகள் எல்லாம் ஒரே மர்மமாக இருக்கின்றன. எந்த இடத்தில், எந்த தொழில்சாலையில், எத்தனை பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன என்ற தகவலை தமிழக அரசின் இணையதளத்தில் உடனே வெளியிடவேண்டும். முதலமைச்சரின் அறிவிப்புகளுக்கும், கள நிலவரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. நம்மால் காணமுடியாத ஒன்றை நமது முதலமைச்சர் கற்பனையாக அறிவித்துக்கொண்டிருக்கிறார்.

உணர வேண்டும்
இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று தம்பட்டம் அடிப்பதை இனியாவது தமிழக ஆட்சியாளர்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும். அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி குன்றி, தாழ்ந்த நிலைக்கு சென்றுகொண்டிருப்பதை மத்திய அரசின் தரைவரிசைப் பட்டியலே அம்பலப்படுத்தியிருப்பதை தமிழக முதலமைச்சர் உணரவேண்டும்.












Click it and Unblock the Notifications