மிஸ் பண்ணிடாதீங்க.. இன்றே கடைசி நாள்.. தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை.. விண்ணப்பித்து விட்டீர்களா
சென்னை: இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களுக்கு 1¼ லட்சம் பேர் விண்ணப்பத்துள்ளார்கள். இன்றே கடைசி நாள், எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ள பெற்றோர்கள் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
2009ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகள் மொத்தம் உள்ள 100 சதவீத இடங்களில், 25 சதவீத இடங்களை ஏழை குழந்தைகளுக்கு தர வேண்டும். ஏழை குழந்தைகள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது. சிபிஎஸ்இ, மெட்ரிக் என எந்த பள்ளியாகஇருந்தாலும் கண்டிப்பாக 25 சதவீதம் இடங்களை ஏழை குழந்தைகளுக்கு தர வேண்டும்.

அந்த குழந்தைகளுக்கு கல்வி கட்டணத்தை பள்ளிகளுக்கு, அரசே செலுத்தும். அந்த வகையில் இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 98 ஆயிரம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக நடப்பு ஆண்டில் 7,738 தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களின் கீழ் சுமார் 85 ஆயிரம் இடங்களில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் (ஏப்ரல்) 20-ந்தேதி தொடங்கி இருந்தது. இதுவரை ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 872 பேர் விண்ணப்பப்பதிவு செய்து உள்ளனர்.
இதற்கான விண்ணப்பப் பதிவு இன்றுடன் (வியாழக்கிழமை) நிறைவு பெற போகிறது. விருப்பம் உள்ள பெற்றோர்கள் rte.tnschools.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இதனிடையே கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வசிக்கும் மாணவர்களுக்கும் அனுமதி வழங்கும்படி பொதுப்படையான உத்தரவை பிறப்பிக்க முடியாது என நேற்று சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
கடந்த 2009ம் ஆண்டு இயற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டப்படி, அனைத்து தனியார் பள்ளிகளும், 25 சதவீத இடங்களில் பின் தங்கிய குழந்தைகளுக்கு மாணவர் சேர்க்கை வழங்க வேண்டும். இந்த சட்டத்தில் குறிப்பிட்ட தனியார் பள்ளிக்கு ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

ஆனால், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வசிப்பதாக கூறி பல குழந்தைகளின் விண்ணப்பங்களை தனியார் பள்ளிகள் நிராகரித்துள்ளதாகவும், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வசிக்கும் குழந்தைகள், ஆன் லைனில் விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க கோரி, கோவையைச் சேர்ந்த முத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், சேர்க்கை மறுக்கப்பட்ட மாணவர்கள் குறித்த விவரங்களை மனுதாரர் வழங்கவில்லை எனவும் அரசுத்தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், முழுமையான விவரங்கள் இல்லாத நிலையில் பொதுப்படையாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என மறுத்துவிட்டனர்.மேலும், சேர்க்கை மறுக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தால் பரிசீலிக்கப்படும் எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications