நீட் தேர்வு, அரசு கலை கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க.. இன்றே கடைசி நாள்
சென்னை: மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வுக்கும் தமிழ்நாட்டில் உள்ள 143 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்றே (ஆகஸ்ட் 10) கடைசி நாளாகும்.
இந்தியாவில் கொரோனா பரவல் கடந்த ஆண்டு தொங்கியது முதலே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. ஆன்லைன் முறையிலேயே பாடங்கள் கற்பிக்கப்பட்டன.
ஆன்லைன் கல்வி கற்க இயலாத மாணவர்களுக்கு உதவும் வகையில் கல்வி தொலைக்காட்சி என்ற புதிய டிவி சேனலும் தொடங்கப்பட்டது.

+2 தேர்வு ரத்து
கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை உச்சமடைந்தது. டெல்டா கொரோனாவால் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சத்தில் இருந்தது. இந்தச் சூழலில் மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்பட்டால் அது வைரஸ் பரவலுக்கு வித்திடும் என்பதால், +2 பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர். அதன்படி முதலில் சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து மாநில வழிக்கல்விகளில் படிக்கும் மாணவர்களின் பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டது.

மதிப்பெண்கள்
10 மற்றும் +1 வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்கள், +2 பருவ தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு +2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. கல்லூரிகளுக்கு இந்த மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் சேர மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

கலை அறிவியல் கல்லூரி
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2021-22ஆம் கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்பில் சேர www.tngasa.in, www.tngasa.in என்கிற இணையதளத்தில் மூலம் கடந்த ஜூலை 26ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1.20 லட்சம் இடங்கள் உள்ள நிலையில், இதுவரை சுமார் 2.8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

நீட் தேர்வு
அதேபோல கொரோனா பாதிப்பு காரணமாக நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றித் தேர்வு நடைபெறும் என மத்திய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவித்திருந்தார். முதலில் ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் அது ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இன்று மாலை வரை நீட் எழுத விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அதேபோல நீட் விண்ணப்பங்களில் திருத்தங்களை ஆகஸ்ட் 11 முதல் 14 வரை மேற்கொள்லாலம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்கள் குறைவு
கொரோனா பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை இந்த முறை கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த 2018-19ஆம் ஆண்டில் 19,680 அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் எழுத விண்ணப்பித்திருந்தார். கடந்த ஆண்டு இது 8132ஆக குறைந்திருந்த நிலையில், இந்த ஆண்டு இது மேலும் குறைந்து சுமார் 6,500 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். அதிலும் கரூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் இருந்து ஒரு சிலர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். அதிகபட்சமாக மதுரையில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதேபோல தலைநகர் சென்னையில் இருந்து சுமார் 140 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications