அசானி புயலின் நகர்வு எப்படி... எங்கெங்கு கனமழை? - மீனவர்கள் உடனே கரை திரும்ப உத்தரவு
அசானி புயலால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் இன்றைய தினம் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், திருவாரூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் சென்னை தொடங்கி பல ஊர்களில் பலத்த மழை பெய்து வருகிறது. காற்றுடன் பெய்த கனமழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அனல் மறைந்து குளுமை பரவியுள்ளதால் இந்த கோடைகால மழையை மக்கள் அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர்.
அசானி புயலின் புண்ணியத்தால் கிடைத்துள்ள இந்த மழை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் நல்ல செய்தி கூறியுள்ளது.
செக்க செவேல்னு மின்னும் சென்னை.. சுற்றி சிவப்பு தக்காளிகள்! அசானி புயலால் மீண்டும் மழை இருக்கு!
அசானி நகரும் பாதை
நேற்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய "அசானி" தீவிர புயல் இன்று காலை 08:30 மணி அளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று இரவு வரை வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவக் கூடும். அதன்பிறகு வடக்கு-வடகிழக்கு திசையில் வடஆந்திரா -ஒரிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகரக் கூடும். இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும்.
எங்கெங்கு மழை
இன்றைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், திருவாரூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடி மின்னலுடன் மழை
நாளைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் முதல் 14ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் மழை எப்படி
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை விட்டு விட்டு பெய்யக்கூடும். இன்று மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். சூறாவளி காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
பலத்த காற்று வீசும்
ஆந்திர கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். கேரள மற்றும் லட்சதீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை மறுநாள் மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ஆந்திரா கடற்கரை ஓரம்
ஆந்திர கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஒரிசா கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மீனவர்கள் கரை திரும்பவும்
12ஆம் தேதி வட மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆழ் கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்