டாஸ்மாக் கடைகளில் மீண்டும் டோக்கன் முறை.. செயல்படும் நேரம் குறைப்பு.. புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?
சென்னை: டாஸ்மாக் கடைகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த மீண்டும் டோக்கன் முறையை அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், மாநிலத்தில் வரும் 20ஆம் தேதி முதல் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்துவதாகத் தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும், திருமண நிகழ்வுகள், திரையரங்கங்கள், கடைகள் ஆகியவற்றுக்கும் நேரக்கட்டுப்பாட்டைத் தமிழக அரசு அறிவித்தது.
நேற்று முதலில் வெளியான அறிவிப்பில் டாஸ்மாக் கடைகள் குறித்து எவ்வித அறிவிப்பும் இடம்பெறவில்லை. அதன் பின்னர், அரசின் புதிய கட்டுப்பாடுகள் டாஸ்மாக் கடைகளும் பொருந்தும் என்றும் மதுபான கடைகள் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்படும் என்றும் அரசு அறிவித்தது.. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
18 வயதை கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி.. மே 1 முதல் போட்டுக்கொள்ளலாம்.. மத்திய அரசு அறிவிப்பு
இந்நிலையில், டாஸ்மாக் கடைகளுக்கு தற்போது புதிய நெறிமுறைகளை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. மதுபான கடைகளில் கூட்டத்தைத் தவிர்க்க மீண்டும் டோக்கன் முறை கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், டாஸ்மாக் கடைகளை மதியம் 12 மணி முதல் வரை மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மாலை 4 மணிக்கு மேல் டோக்கன்களை வழங்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 55 வயதைக் கடந்த மற்றும் இணை நோய் உள்ள பணியாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இணைந்து செயல்படும் பார்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.. மேலும் மாஸ்க் அணிந்து வரும் வாடிக்கையாளர்கள் மட்டும் மதுபானத்தை விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.