வண்டியே வராது.. ரோட்டில் ஓடலாம்.. விளையாடலாம்.. சென்னை பெசன்ட் நகரில் நாளை வாகனமில்லா ஞாயிறு
சென்னை: சென்னை பெசன்ட் நகர் பகுதியில் நாளை வாகனமில்லா ஞாயிற்றுகிழமை கடைப்பிடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியில், வாகனமில்லா போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், குழந்தைகளுடன், பெற்றோர் வெளியே விளையாடி மகிழவும், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாநகர காவல்துறை சார்பில், வாகனமில்லா ஞாயிற்றுகிழமைகள் நடத்தப்பட்டு வருகிறது. அன்றைய தினம் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்படும். சாலைகளில் பொதுமக்கள், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடலாம்.
கேஜிஎஃப் ராக்கியாக ஆசையாம்.. அடுத்தடுத்து வான்டடாக செய்த 5 கொலைகள்.. 19 வயது இளைஞரால் ஷாக்
பெசன்ட் நகரில் வாகனமில்லா ஞாயிறு
அந்த வகையில், சென்னை பெசன்ட் நகர் பகுதியில், நாளை வாகனமில்லா ஞாயிற்றுகிழமை கடைப்பிடிக்கப்படுகிறது. இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை பெசன்ட் நகர், 6வது அவென்யூ கிழக்கு பகுதியில் 32வது குறுக்கு தெருவிலிருந்து 3வது பிரதான சாலை சந்திப்பு வரை (வாகனமில்லா ஞாயிற்றுக்கிழமை) "Car-Free Sunday" நிகழ்ச்சியானது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடத்தப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமையில் உடற்பயிற்சி
அதாவது, 04.09.2022, 11.09.2022, 18.09.2022, 25.09.2022, 02.10.2022, 16.10.2022 மற்றும் 23.10.2022 ஆகிய நாட்களில் காலை 06.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை இந்தப் பகுதியில், தி இந்து மற்றும் சென்னை பெருநகர போகுவரத்து காவல் துறையால் இணைந்து நடத்தப்படும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடும் பொதுமக்களுக்கு இந்த பகுதி பயன்படுத்தப்படும்.
போக்குவரத்தில் மாற்றங்கள்
இந்நிகழ்ச்சிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. அதன்படி 7வது நிழற்சாலையிலிருந்து 6வது நிழற்சாலை வரை எலியட்ஸ் கடற்கரைக்கு செல்ல உத்தேசித்துள்ள வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் அவை இலக்கை அடைய 16வது குறுக்குத் தெரு வழியாக 2வது நிழற்சாலையை நோக்கி திருப்பி விடப்படும்.
16வது குறுக்குத் தெருவில் இருந்து 6வது நிழற்சாலையை நோக்கிச் செல்ல வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் அவை 2வது நிழற்சாலை மற்றும் 16வது குறுக்குத் தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும். 3வது மெயின் ரோட்டில் இருந்து 6வது நிழற்சாலையை நோக்கி செல்லும் வாகனங்கள் தடைசெய்யப்பட்டு, 3வது மெயின் ரோடு மற்றும் 2வது நிழற்சாலை சந்திப்பில் திருப்பி விடப்படும்.
வாகன ஓட்டிகள் ஒத்துழைக்க கோரிக்கை
4வது மெயின் ரோடு மற்றும் 5வது நிழற்சாலையில் இருந்து 6வது நிழற்சாலை வழியாக எலியட்ஸ் கடற்கரைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. அவை மேலும் 4வது மெயின் ரோடு மற்றும் 5வது நிழற்சாலை வழியாக திருப்பி விடப்படும். வாகன ஓட்டிகள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.