கப்பலோட்டிய தமிழன்.. செக்கிழுத்த செம்மல்.. வரலாறாய் வாழும் வ.உ.சிதம்பரனார் பிள்ளை!
சென்னை: கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல், என பல அடைமொழிகளுக்கு சொந்தக்காரரான வ.உ.சிதம்பரனார் பிள்ளையின் 151வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது.
அரசு சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு வ.உ.சிதம்பரனார் பிள்ளையின் படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தவுள்ளார்.
மறைந்தும் வரலாறாய் வாழும் வ.உ.சிதம்பரனார் பிள்ளை பற்றிய சிறிய தொகுப்பு இதோ;
பின்னடைவா? அன்னைக்கு அதிகாலை 4 மணிக்கு வந்ததை மறந்துட்டீங்களா? கடைசில நாங்கதான் - ஓபிஎஸ் டீம் பரபர!
தூத்துக்குடி மாவட்டம்
செக்கிழுத்த தியாகச் செம்மல் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் உலகநாதன் பிள்ளை - பரமாயி அம்மையார் தம்பதியருக்கு 02.09.1872ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். அடிப்படைக் கல்வியை ஒட்டப்பிடாரத்திலும், உயர்நிலைக் கல்விப் படிப்பை தூத்துக்குடியிலும், சட்டக் கல்வியை திருச்சியிலும் பயின்று 1894 ஆம் ஆண்டு வழக்கறிஞர் ஆனார். மேலும், சமூக சேவையிலும், அரசியல் பணியிலும் படிப்படியாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் வ.உ.சி.
சுதேசிச் சங்கம்
தாய் நாட்டின் விடுதலைக்காகத் தமிழகத்திலிருந்து பங்கேற்ற தலைவர்களில் முதன்மையானவர் வ.உ.சிதம்பரனார். அரசியல் வாழ்க்கையில் பாலகங்காதர திலகரைத் தனது குருவாக ஏற்றுக் கொண்டு, ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை, அடியோடு ஒழித்திட, அரசியல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். இதனாலேயே கப்பலோட்டிய தமிழன் என்று பெயர் பெற்றார்.
இரட்டை ஆயுள் தண்டனை
வ.உ.சிதம்பரனாரின் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்த ஆங்கிலேயர்கள், அரசாங்கத்தை அவமதித்ததாகவும், சுதந்திரத்திற்காக பொதுமக்களைத் தூண்டியதாகவும் இவர் மீது வழக்கு பதிவு செய்து, இரட்டை ஆயுள் தண்டனை விதித்தனர். இதன் காரணமாக 1908ஆம் ஆண்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டு, செக்கிழுக்க வைக்கப்பட்டார்.
தமிழ் வளர்ச்சி
தமிழக மக்களால் பெரிதும் போற்றப்படும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும், தாய்மொழி, தமிழ்மொழி மீது கொண்டிருந்த தணியாத தாகத்தின் காரணமாக பல அரிய நூல்களையும், சுயசரிதையையும் கவிதை வடிவில் எழுதியுள்ளார். தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர்.