நீட்தேர்வுக்கு தயாராகும் அரசு மாணவர்களுக்கு ஹைடெக் லேப் மூலம் பயிற்சி - அன்பில் மகேஷ்
நீட்தேர்வுக்கு தயாராகும் அரசு மாணவர்களுக்கு ஹைடெக் லேப் மூலம் முழுமையான பயிற்சி அளிக்கப்படுகிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
சென்னை: நீட்தேர்வுக்கு தயாராகும் அரசு மாணவர்களுக்கு ஹைடெக் லேப் மூலம் முழுமையான பயிற்சி அளிக்கப்படுகிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். அதே நேரத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெரும் வரை ஓயவும் மாட்டோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
பொது மருத்துவம், பல் மருத்துவம் துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தேசியத் தேர்வு முகமை இந்த நுழைவுத்தேர்வை நடத்தி வருகிறது. தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வு அச்சத்தால் பல மாணவர்கள் தங்களின் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் இதுவரைக்கும் அந்த தீர்மானத்தை குடியரசுத்தலைவருக்கு அனுப்பவில்லை என்று தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என்று தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்த நிலையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஹைடெக் லேப் மூலம் நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படுவதாக கூறினார்.
தமிழகத்தில் செயல்படும் 37,358 அரசுப் பள்ளிகளில் சுமார் 48 லட்சம் மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். ஏறத்தாழ 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
மத்திய அரசின் நிதியுதவி மூலம் அரசுப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், மாணவர்கள் இணைய வசதியுடன் கல்வி கற்கும் வகையில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் எனப்படும் ஹை-டெக் லேப் அமைக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்தது.
முதல்கட்டமாக 6,029 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இவை அமைக்கப்பட்டன. தொடர்ந்து, நடுநிலைப் பள்ளிகளில் ரூ.500 கோடி மதிப்பில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேல்நிலைப் பள்ளிகளில் தேவைக்கேற்ப 10 முதல் 20 கணினிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதன் மூலம் மாணவர்களுக்கு கணினி பயிற்சி வழங்குவதுடன், இணையவழி தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.
நீட் தேர்வுக்கு நாளை மறுநாள் முதல் மே 7ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் இந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ளது என தேசியத் தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு 16.4 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், இந்த ஆண்டு 20 லட்சம் பேர் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளதாக தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டுமா? அல்லது விலக்கு பெற்று விடுவார்களா என்று அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாணவர்களும் பெற்றோர்களும் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் நீட் தேர்வுக்கு தயாராகும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஹைடெக் லேப் மூலம் பயிற்சி அளிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். அமைச்சரின் பேட்டி மூலம் இந்த ஆண்டு மாணவர்கள் நீட் தேர்வு எழுத வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications