ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - போக்குவரத்துத்துறை அமைச்சர் எச்சரிக்கை
சென்னை: தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளை கண்காணிக்க ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சனி, ஞாயிறு, திங்கட்கிழமை என மூன்று நாட்கள் தொடர்விடுமுறை வருகிறது. இதனால் சென்னையில் இருந்து பலரும் விடுமுறையைக் கொண்டாட சொந்த ஊருக்கு செல்கின்றனர். ரயில்களில் ரிசர்வேசன் முடிந்து விட்டதால் வெயிட்டிங் லிஸ்ட் உள்ளது. தட்கள் முறையிலும் டிக்கெட் கிடைக்காதவர்கள் தனியார் பேருந்துகளில் செல்ல டிக்கெட் புக் செய்து வருகின்றனர்.
மூன்று நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல டிக்கெட் புக் செய்ய முயன்றவர்களுக்கு மயக்கம் வராத குறைதான்.
இரக்கமே இல்லையா? இந்த வீக் எண்ட் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு போறீங்களா? இதை முதல்ல படிங்க!
கட்டணக்கொள்ளை
மதுரை, நெல்லைக்கு வழக்கமாக 1400 வரை விற்கப்பட்ட டிக்கெட் தற்போது 4000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். திருச்சிக்கு சாதாரணமாக 800 ரூபாய் கட்டணம் இருந்த நிலையில் தற்போது ரூ.2300 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு கொள்ளையடிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து கோவைக்கு வழக்கமாக ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது 3 ஆயிரம் வரை டிக்கெட் விற்பனையாகிறது என்பதும் பயணிகளின் குற்றச்சாட்டாகும். திருச்சியில் இருந்து பெங்களூருவிற்கு ரூ.2500 வரை வசூலிக்கப்படுவதாகவும் டிக்கெட் புக் செய்த பயணிகள் புகார் அளித்துள்ளனர்.
அமைச்சர் சிவசங்கர்
இந்த நிலையில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொலைதூர நகரங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்துள்ளது. கூடுதல் கட்டணம் குறித்து மக்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் பேருந்துகள்
திருவிழா காலங்கள், நீண்ட விடுமுறை வரும் நாட்களில் கூடுதல் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு பொதுமக்கள் இடையூறு இல்லாமல் பயணம் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் இன்றைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இருந்த போதிலும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
கடும் நடவடிக்கை
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க இணை போக்குவரத்து ஆணையர், துணை போக்குவரத்து ஆணையர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் போன்ற அதிகாரிகளை கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆய்வின்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டு இதேபோன்ற சூழலில் நானே நேரடியாக ஆய்வு செய்து கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பி வழங்க செய்திருந்தோம். அதே போன்ற நடவடிக்கைகள் தொடரும் என்றும் அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.