நான் ஷூட்டிங்கில் இருக்கிறேன்.. போலீஸ் விசாரிக்கும் நபர் நானில்லை.. டிடிவி பாஸ்கரன் மறுப்பு
சென்னை: என்னிடம் ஒரு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஊடகங்களில் வந்த செய்தியை திட்டவட்டமாக மறுக்கிறேன் என்றும் நான் ஒரு சினிமா படப்பிடிப்பில் தற்போது இருப்பதாகவும் டிடிவி பாஸ்கரன் வீடியோ மூலம் விளக்கமளித்துள்ளார்.
சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி பாஸ்கரன். இவருடைய சகோதரர் டிடிவி தினகரன். இந்த நிலையில் பாஸ்கரன் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவர் ஒரு வழக்கில் விடிய விடிய விசாரிக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
இந்த செய்தியை பாஸ்கரன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: எல்லோருக்கும் வணக்கம். நான் நீலாங்கரையிலிருந்து பாஸ்கரன் பேசுகிறேன். பத்திரிகை மற்றும் மீடியா துறை நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
நான் டிஃபெண்டர் (Defender) எனும் படப்பிடிப்பில் மும்முரமாக நடித்து கொண்டிருக்கிறேன். இப்படி இருக்கையில்தான் இன்று காலை நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். அதாவது செம்மரக் கடத்தல் வழக்கில் என்னை விசாரணை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று! நிறைய ஊடகங்களில் சசிகலாவின் உறவினர் என என் பெயரை போட்டு, என் படத்தையும் பயன்படுத்தியுள்ளார்கள்.
நான் மீடியாக்களுக்கு என்ன சொல்கிறேன் என்றால் அது போன்ற ஒரு விஷயத்தில் எனக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. அது உண்மையும் கிடையாது. உலகிலேயே எத்தனையோ பாஸ்கரன்கள் இருக்கலாம். உறவினர்களில் எத்தனையோ பாஸ்கரன்கள் இருக்கலாம். அது எந்த பாஸ்கரன் என்பதை மீடியாக்காரர்கள்தான் செக் செய்து பார்த்து போட வேண்டும்.
போலீஸாரால் விசாரணை செய்யப்பட்டு வரும் பாஸ்கரன் சசிகலாவுக்கு நெருங்கிய உறவினர் கிடையாது. தூரத்து சொந்தம்தான். நிறைய மீடியாக்களில் என்னை பற்றிய தவறான செய்தி வெளியாகியுள்ளது. எனவே மறுப்பு செய்தி போடாவிட்டால் ஊடகங்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுப்பேன். இனிமேல் என்னை பற்றி தவறான செய்திகளை விசாரிக்காமல் போட வேண்டாம் என பத்திரிகைத் துறையினருக்கு வேண்டுகோளாக வைக்கிறேன். வணக்கம். இவ்வாறு அந்த வீடியோவில் பாஸ்கரன் பேசியுள்ளார்.