கூவத்தூரிலிருந்து குற்றாலத்துக்கு வந்து நிற்கும் ரிசார்ட் அரசியல் .. இனி எங்கெல்லாம் போவாங்களோ!
Recommended Video

சென்னை: தற்போது ரிசார்ட் அரசியல் கூவத்தூரிலிருந்து குற்றாலத்துக்கு வந்து நிற்கிறது. தேர்தல் முடிவதற்குள் இன்னும் எத்தனை இடங்களுக்குதான் போவாங்களோ.
ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. இதையடுத்து தன் தரப்பு எம்எல்ஏக்களை ஓபிஎஸ் தரப்போ அல்லது எதிர்க்கட்சியினரோ விலைக்கு வாங்கக் கூடும் என்பதால் 122 எம்எல்ஏக்களும் சசிகலா தலைமையில் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர்.

நம்பிக்கையில்லை
இதையடுத்து ஒரு வாரம் கழித்து அவர்கள் நேரடியாக சட்டசபைக்கு அழைத்து செல்லப்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்றனர். இந்நிலையில் சசிகலாவையும் தினகரனையும் ஈபிஎஸ் தரப்பு தனித்து விட்டது. இதையடுத்து எடப்பாடி மீது நம்பிக்கையில்லை எனக் கூறி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பரபரப்பை ஏற்படுத்தினர்.
[சசிகலாவை சந்தித்தவுடன் முடிவு.. டிடிவி தினகரன் குற்றாலத்தை தேர்வு செய்ய காரணம் என்ன? ]

ஊஞ்சல் விளையாடுவது
இதைத் தொடர்ந்து எடப்பாடி அரசு கவிழும் என எதிர்பார்க்கப்பட்டது. மீண்டும் கூவத்தூர் பார்முலா அமல்படுத்தப்பட்டது. புதுச்சேரியில் உள்ள சின்னவீரானம்பட்டினத்தில் விண்ட்பிளவர் ரிசார்ட்டில் 19 தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களும் தங்கியிருந்தார். ஊஞ்சல் விளையாடுவது, பந்து விளையாடுவது என பொழுதை கழித்தனர்.

ஓரிரு நாளில் தீர்ப்பு
இந்நிலையில் புதுவையிலிருந்து சென்னைக்கு சென்ற போது ஜக்கையன் அணி மாறிவிட்டார். இதனால் அங்கிருந்து மைசூரில் கூர்க்கில் உள்ள ஒரு ரிசார்ட்டில் 18 பேரும் (ஜக்கையன் அணி மாறியதால் 18 பேர்) அடைத்து வைக்கப்பட்டனர். 18 பேரையும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட பின்னர் தற்போது அதன் மீதான வழக்கில் இன்னும் ஓரிரு நாளில் தீர்ப்பு வெளியாகும்.

ஏற்பாடுகள்
இதனால் அதிமுகவினர் தங்கள் தரப்பு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கக் கூடும் என்பதால் அவர்களை குற்றாலத்தில் தங்க வைக்க ஏற்பாடுகளை செய்துள்ளார் தினகரன். ஒரு வேளை தீர்ப்பு தினகரன் எம்எல்ஏக்களுக்கு சாதகமாக வந்தால் எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்துவிடும். அந்த சமயம் 18 பேரையும் தங்கள் பக்கம் இழுக்கும் வேலைகளில் அதிமுக ஈடுபடக் கூடும் என்பதால் தினகரன் இப்போதே உஷாராகி தகுதி நீக்க எம்எல்ஏக்களை குற்றாலத்துக்கு கொண்டு சென்றுவிட்டார்.

எத்தனை ரிசார்டுகள்
இன்னும் தேர்தல் தொடங்குவதற்குள் எத்தனை ரிசார்ட்டுகளுக்கு இந்த எம்எல்ஏக்கள் பயணம் செய்வரோ என தெரியவில்லை. கூவத்தூர் டூ குற்றாலத்துக்கு பயணம் செய்துள்ள தகுதி நீக்க எம்எல்ஏக்களின் இந்த சமயோஜித முயற்சி வெற்றி பெறுமா இல்லை புஸ்வானம் போல் ஆகிவிடுமா என்பது போக போகத்தான் தெரியும்.












Click it and Unblock the Notifications