"அவங்கள தூக்கிடலாம்".. ஸ்டிராங் நம்பிக்கையில் தினகரன்.. தெற்கை அள்ளுமா அமமுக?
தென்மண்டலங்களில் அமமுக செல்வாக்கு இனி உயரும் என்கிறார்கள்
சென்னை: வாக்குப்பதிவுக்கு பிறகும், டிடிவி தினகரன் மிகுந்த தெம்புடன், தைரியத்துடன் இருக்கிறாராம்.. தென்மண்டலத்தில் இனி வரும் காலங்களில் அமமுக அதிமுகவைவிட மிகுந்த செல்வாக்கை பெறும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டு வருகிறதாம்!
இந்த முறை தேர்தலில் டிடிவி தினகரனின் அரசியல் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.. கொரோனா தொற்று ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தது முதல், சென்னைக்கு அழைத்து வந்ததுவரை அனைத்து ஏற்பாடுகளையும் இழுத்து போட்டு மிகுந்த அக்கறையோடு செய்திருந்தார் டிடிவி தினகரன்.
ஆனால், சசிகலாவின் அரசியல் விலகலால் நொந்து போனார்.. அன்று இரவு முழுவதும் தூங்க முடியாமல், முக்கிய நிர்வாகிகளை அழைத்து இரவெல்லாம் ஆலோசனை செய்தார்.. இறுதியில் தனித்து களமிறங்குவது என்று துணிச்சலான முடிவெடுத்தார்..
பிரேமலதா
திமுகவுக்கு நேரடியாகவும், அதிமுகவுக்கு மறைமுகமாகவும் செக் வைத்தார்.. தனித்து விடப்பட்ட தேமுதிக அழைத்து வந்து சீட்களை அள்ளி தந்து தன் கூட்டணியை முடிந்தவரை பலப்படுத்தினார். பிரேமலதா கேட்ட விருதாச்சலத்தை ஒதுக்கி தந்து, கோவில்பட்டியில் நேரடியாக போட்டியிடுவதாக அறிவித்தார்.. தினகரன் கோவில்பட்டியில் போட்டி என்றதுமே விக்கித்து போனது அதிமுக.. கடம்பூர் ராஜு திணறியே போனார்.. கோவில்பட்டியை மையப்படுத்தியே பிரச்சாரங்களை பலப்படுத்தினார்.. வாக்குப்பதிவும் நடந்து முடிந்தது..!
தெம்பு
ஆனால், பிரச்சார சமயங்களில், தென் மண்டலத்தில் அதிமுகவுக்கு எதிரான அலையை கண்டதுமே ஒருவித தெம்பு தினகரனுக்கு வந்துவிட்டதாம்.. எப்படியும் இந்த முறை 2 தொகுதிகளிலாவது தென்மண்டலங்களில் அமமுக வெற்றி பெற்றுவிடும் என்றும், அதிலும் 20 தொகுதிகளிலாவது திமுகவுக்கு அடுத்த இடத்தை அமமுக பிடித்துவிடும் என்றும் நம்புகிறாராம்.
அரசியல் நோக்கர்கள்
இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. எனினும், இதுகுறித்து அரசியல் நோக்கர்கள் சிலரிடம் நாம் பேசியபோது சொன்னதாவது: "தினகரனுக்கு தென்மண்டலங்களில் செல்வாக்கு ஓரளவு சிதறிவிடாமல் இருக்கத்தான் செய்கிறது.. கடந்த முறை 5.5 வாக்கு வங்கி இருந்தது என்றால், இந்த முறையும் அதே அளவுக்கு வருமா என்று தெரியாது.. கடந்த எம்பி தேர்தலின்போது இருந்த டிடிவிக்கு இருந்த ஆதரவு மற்றும் எதிர்பார்ப்பு அலை இந்த முறை தேர்தலின்போது இல்லை என்பதே உண்மை.
அமமுக
திமுகதான் பொது எதிரி, திமுகவை வீழ்த்துவோம் என்று தினகரன் சொன்னாலும், இந்த முறை அமமுகவுக்கு அதிமுகவின் வாக்குகள்தான் பிரதானமாக டிரான்ஸ்பர் ஆகியிருப்பதாக தெரிகிறது.. அதனால், ரிசல்ட் தான் நமக்கு ஒரே முடிவு..! அதேசமயம், தென்மாவட்டங்களில், பிரச்சாரங்களின்போது, அமமுகவின் மீது விமர்சனங்கள் எழாமல் இல்லை.. சசிகலா தன் முடிவை அறிவித்ததுமே, தன்னுடைய நிர்வாகிகளுக்கு "நான் இருக்கேன்.. தைரியமா நில்லுங்கள்" என்று தெம்பூட்டி இருக்கிறார் தினகரன்..!
பூத் செலவு
ஆனால், அமமுகவின் சில வேட்பாளர்களுக்கு பூத் செலவுக்குகூட பணம் தரப்படவில்லையாம்.. அந்த வேட்பாளர்களோ, சொந்த காசை போட்டு ரொம்பவே திண்டாடியும் இருக்கிறார்கள் போலும்.. ஒருசில தொகுதிகளில் முறையாக பிரச்சாரமே நடக்கவில்லை, இந்த தகவல் எல்லாம் கடைசி நேரத்தில் தலைமைக்கு சென்றபிறகே, இந்த பிரச்சனை சரிசெய்யப்பட்டிருக்கிறது" என்றனர்.