அக்காள் ஊராட்சி மன்றத்தலைவர்.. தங்கை ஒன்றிய கவுன்சிலர்.. தேர்தலில் அசத்திய சகோதரிகள்!
சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 138 மாவட்ட கவுன்சிலர், 1,375 ஒன்றிய கவுன்சிலர், 2,779 கிராம ஊராட்சி தலைவர், 19,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது.
அக்டோபர் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நடந்தது. நேற்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது.

தி.மு.க கைப்பற்றியுள்ளது
இந்த உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை தி.மு.க கைப்பற்றியுள்ளது. மக்கள் பலம் தங்களுக்குதான் என்று தி.மு.க மீண்டும் ஒருமுறை தனது பலத்தை நிரூபித்துள்ளது. எதிர்கட்சியான அ.தி.மு.க பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. பிரதான கட்சிகளின் நிலை இவ்வாறு இருக்க இந்த உள்ளாட்சி தேர்தலில் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லை.

பாஜக உறுப்பினர் நிலை
''உள்ளாட்சி தேர்தலில் எங்கள் செல்வாக்கை நிரூபிப்போம்'' என்று பாஜக தொடர்ந்து கூறி வந்த நிலையில் கோவையில் பாஜக உறுப்பினர் ஒருவர் வெறும் ஒரு வாக்கு மட்டுமே பெற்று உலகளவில் டிரெண்டிங் ஆனார். பலம்வாய்ந்த கட்சிகளின் உறுப்பினர்களே வெற்றி பெற முடியாத நிலையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை யூனியன் சிவந்திபட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அசத்தினார் 90 வயது மூதாட்டி ஒருவர்.

சகோதரிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் சகோதரிகள் இருவர் வெவ்வேறு பதவிகளில் வெற்றி பெற்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே காவேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணுரங்கம். இவரது மகள்களான மாலா சேகர் (50) மற்றும் உமா கண்ணுரங்கம் (48) ஆகியோர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டனர்.

ஊராட்சி மன்றத் தலைவர் பதவி
அக்காள் மாலா சேகர் காவேரிப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். தங்கை உமா கண்ணுரங்கம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை முடிவில் மாலா சேகர் 651 வாக்குகள் பெற்றும், உமா கண்ணுரங்கம் 1,972 வாக்குகள் பெற்றும் அசத்தல் வெற்றி பெற்றனர். உள்ளாட்சி தேர்தலில் மக்களின் அன்பை பெற்று சாதித்த அக்கா-தங்கை இருவருக்கும் பாராட்டு குவிந்து வருகிறது.












Click it and Unblock the Notifications