உதயசூரியன் வடிவத்தில் கருணாநிதியின் நினைவிடம் - தலைவர்களின் நினைவிடங்களும் தொடரும் சர்ச்சைகளும்

மறைந்த முதலமைச்சர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உதயசூரியன் வடிவத்தில் கருணாநிதியின் நினைவிடம் அமைக்கப்பட உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் உதயசூரியன் வடிவில் நினைவிடம் கட்டப்படுகிறது. 2.21 ஏக்கரில் கட்டப்படும் கருணாநிதி நினைவிடத்தின் முகப்பில் பேனா வடிவில் பிரம்மாண்ட தூணும் அமைக்கப்படுவதாக மாதிரி வடிவத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி உடல்நலக்குறைவால் கருணாநிதி காலமானார். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சராகவும், 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும், 50 ஆண்டு திமுக தலைவராகவும் இருந்த கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிக்கை வாசித்த முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் ரூ.39 கோடியில் 2.23 ஏக்கரில் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படும் எனவும், கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஒளி படங்களும் அந்த நினைவிடத்தில் அமையும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சியான அதிமுகவும் மகத்தான வரவேற்பை அளித்துள்ளது.

உதயசூரியனும் பேனாவும்

உதயசூரியனும் பேனாவும்

2.21 ஏக்கரில் கட்டப்படும் கருணாநிதி நினைவிடத்தின் மாதிரி வடிவமைப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. உதயசூரியன் வடிவத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படுகிறது. நினைவிடத்தின் முகப்பில் திறந்துள்ள பேனா வடிவத்தில் பிரம்மாண்ட தூண் ஒன்றும் அமைக்கப்படுகிறது.

பேனா வடிவ தூண்

பேனா வடிவ தூண்

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியையும் பேனாவையும் எப்போதும் பிரிக்க முடியது. பவுன்டன் பேனாவை தனது சட்டைப்பையில் வைத்திருப்பார். அவர் மரணமடைந்த பின்னர் இறுதி அஞ்சலி நடந்தபோது சட்டைப் பையில் அந்தப் பேனா வைக்கப்படவில்லை. அதனைக் கவனித்த கனிமொழியின் மகன் ஆதித்யா, பேனாவை கருணாநிதியின் சட்டைப்பையில் எடுத்து வைத்தார். இப்போது அவரது நினைவிடத்தின் முன்பு பிரம்மாண்ட பேனா வடிவத்தில் தூண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

எதையும் தாங்கும் இதயம்

எதையும் தாங்கும் இதயம்

திமுக நிறுவனரும் மறைந்த முன்னாள் முதல்வருமான அண்ணாவிற்கு மெரீனாவில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. தலைநகரத்திற்கு வரும் மக்கள் அனைவரும் அண்ணா சமாதியை பார்த்து விட்டு செல்வார்கள். அண்ணா நினைவிடத்தில் மிகப்பெரிய தூண் ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கும். எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது என்ற வாசகம் அவரது நினைவிடத்தில் எழுதப்பட்டிருக்கும். சமாதியைச் சுற்றியிலும், அவரது பொன்மொழிகள் புத்தக வடிவிலான கல்வெட்டுக்களில் செதுக்கப்பட்டன. அணையா விளக்கு ஒன்றையும் ஏற்றிவைத்தார் அப்போதைய முதல்வர் கருணாநிதி.

மாற்றி அமைத்த ஜெயலலிதா

மாற்றி அமைத்த ஜெயலலிதா

அண்ணா சதுக்கம் சென்னையின் மிக முக்கிய அடையாளமாக மாறியது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த போது சுமார் ரூ. 2.75 கோடியில் அண்ணா நினைவிடம் புனரமைக்கப்பட்டபோது உதயசூரியன் போல் நுழைவு வாயில் வைக்கப்பட்டது. கடந்த 2001ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அந்த உதயசூரியன் நுழைவு வாயிலை அகற்றினார். தந்தம் போன்ற ஒரு வாயிலை அமைத்தார். பின்னர் சமாதிக்கு செல்லும் பாதைகளை விரிவடையச் செய்து மார்பிள் கற்களை சமாதியில் பதித்தார். மேலும் சமாதியின் அருகே மண்டபங்களையும் அமைத்தார்.

இரட்டை இலை வடிவம்

இரட்டை இலை வடிவம்

அதிமுக நிறுவனரும் மறைந்த முதல்வருமான எம்ஜிஆர் 1987ஆம் ஆண்டு மறைந்த பின்னர் அண்ணா நினைவிடத்தின் அருகில் நினைவிடம் அமைக்கப்பட்டது. எம்.ஜி.ஆரின் நினைவிடம் மெரினா கடற்கரையில் 8.25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் முதல்வரான ஜெயலலிதா எம்ஜிஆரின் நினைவிடத்தை பிரம்மாண்டமாக கட்டி திறந்து வைத்தார். தாமரை இதழ்கள் போன்ற கட்டமைப்பு உள்ளது. நீரூற்றுக்களும், பசுமையான புல்வெளிகளும் அமைக்கப்பட்டுள்ளன. 2011ஆம் ஆண்டு மீண்டும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக்கு வந்த போது எம்ஜிஆர் நினைவிடம் புதுப்பிக்கப்பட்டது. அவரது நினைவிடத்தில் பறக்கும் குதிரையும் இரட்டை இலை போன்ற வடிவமும் அமைக்கப்பட்டுள்ளது. 'diligence earns eminence' என்ற வாசகம் எம்ஜிஆர் சமாதியில் எழுதப்பட்டுள்ளது.

பறக்கும் குதிரையின் இறகுகள்

பறக்கும் குதிரையின் இறகுகள்

எம்ஜிஆர் நினைவிடத்தின் முகப்பில் அதிமுகவின் தேர்தல் சின்னமான இரட்டை இலை பொருத்தப்பட்டிருக்கிறது என்றும் இதனை நீக்க வேண்டும் என்றும் திமுக சார்பில் வழக்கறிஞர் அணி செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அதற்கு விளக்கம் அளித்த அதிமுக, எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் பதிக்கப்பட்டிருப்பது இரட்டை இலை வடிவம் இல்லை பறக்கும் குதிரையின் உயர்த்தப்பட்ட இறகுகள் என்றும் தெரிவித்தது.

பீனிக்ஸ் பறவை வடிவ நினைவிடம்

பீனிக்ஸ் பறவை வடிவ நினைவிடம்

கடந்த 2016ஆம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளராகவும் முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா மரணமடைந்தார். எம்ஜிஆர் நினைவிடத்தின் அருகிலேயே ஜெயலலிதாவிற்கு பீனிக்ஸ் பறவை வடிவத்தில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. ஜெயலலிதா நினைவிடத்தின் முகப்பு பகுதியில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மார்பளவு சிலை நிறுவப்பட்டுள்ளது. மேற்கூரை அமைக்கப்பட்ட நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேல் சூரிய சக்தி மின்சார பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. நினைவிட வளாகத்தில் அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லாலான நடைபாதை, 1.20 லட்சம் சதுர அடி பரப்பளவில் கிரானைட் கற்களால் அமைக்கப்பட்டுள்ள தரைப்பகுதி, புல்வெளி மற்றும் நீர்த்தடாகங்கள், சுற்றுச்சுவர், அலங்கார மின்சார விளக்குகள் அமைக்கப்பட்டிருப்பதுடன், சிற்ப கலை வேலைப்பாடுகளும் இடம்பெற்றுள்ளன.

மக்களால் நான் மக்களுக்காக நான்

மக்களால் நான் மக்களுக்காக நான்

ஜெயலலிதா பேசும் போது அடிக்கடி உச்சரிக்கும் வாசகம் அமைதி, வளம், வளர்ச்சி என்பதாகும். அதே போல மக்களால் நான் மக்களுக்காக நான் என்ற வாசகத்தையும் அடிக்கடி கூறுவார். இந்த வாசகங்களை ஜெயலலிதாவின் நினைவிடம் அமைந்துள்ள மேடையில் பொறித்துள்ளனர். எம்ஜிஆர் நினைவிடத்தில் இருப்பது போன்று ஜெயலலிதா நினைவிடத்தில் அணையா விளக்கு ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டப்பட்ட போது கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு விரோதமாக கட்டப்பட்டுள்ளதால், அதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். ஜெயலலிதா நினைவிடம் கட்ட தடை கோரிய வழக்குகளை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்துள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்ற நீதிபதிகள் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறி தள்ளுபடி செய்தனர்.

உதயசூரியன் வடிவ நினைவிடம்

உதயசூரியன் வடிவ நினைவிடம்

கருணாநிதி மறைந்த போது சென்னை மெரினாவில் அவரது உடலை நல்லடக்கம் செய்ய அப்போதய அதிமுக தலைமையிலான தமிழக அரசு அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்குமாறு உத்தரவு பிறப்பித்தது. தற்போது திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் கருணாநிதி நினைவிடம் உதயசூரியன் வடிவத்தில் கட்டப்பட உள்ளது. கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஒளி படங்களும் அந்த நினைவிடத்தில் அமையும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மெரீனா கடற்கரையில் உள்ள தலைவர்களின் நினைவிடங்கள் கட்டப்பட்ட போதே பல்வேறு சர்ச்சைகளும் எழுந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+